விவசாயிகளை தீவிரவாதி என்று அழைத்த குற்றச்சாட்டு... கங்கனா மீது எப்ஐஆர் ...நீதிமன்றம் உத்தரவு!!
பெங்களூரு: விவசாய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து விவசாயிகளை தனது ட்விட்டரில் தீவிரவாதி என்று விமர்சித்து இருந்த நடிகை கங்கனா ரானாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதியுமாறு தும்கூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
''நாட்டில் யாரெல்லாம் குடியுரிமை மசோதாவை எதிர்த்தார்களோ அவர்கள்தான் இன்று விவசாய மசோதாவையும் எதிர்த்து, தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள். நான் சொல்வதை நீங்கள் நன்றாக அறிந்து இருப்பீர்கள், இருந்தாலும் தவறான செய்திகளை பரப்பி வருகிறீர்கள்'' என்று நடிகை கங்கனா ரானாவத் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தனது ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார்.
இதைக் கண்டித்தும் நடிகை கங்கனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரமேஷ் நாயக் எல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ''விவசாய மசோதாவை எதிர்ப்பவர்களை புண்படுத்தும் வகையில் நடிகை கங்கனா ரானாவத்தின் ட்விட்டர் பதிவு இருந்தது. இளைஞர்களின் மனதில் வன்முறையை விதிக்கும் வகையிலும், வன்முறைக்கு தூண்டும் வகையிலும் அவரது பதிவு இருந்தது.
எனவே அவர் மீது 153A, 504, 108 ஆகிய இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் புகார் பதிவு செய்ய வேண்டும்'' என்று கேட்டு இருந்தார். இதையடுத்து நடிகை கங்கனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தும்கூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் ரமேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் செய்தியில், ''அதிகார எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையம் நடிகை கங்கனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. விசாரணையை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு ஆப்பு... அநாகரிக வீடியோ வெளியிடுவதாக குற்றச்சாட்டு!!
தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கங்கனா பெயர் பத்திரிக்கைகளில் அடிபட்டு வருகிறது. இதற்குக் காரணம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மீது அவர் தெரிவித்து இருந்த புகார்கள்தான். மேலும், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைந்து பேசி இருந்தார். இதையடுத்து மும்பையில் இருக்கும் அவரது அலுவலகத்தின் சிறிய பகுதி சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி மும்பை மாநகராட்சி இடித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா வழக்கு தொடுத்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கங்கனாவுக்கு ரூ. 2 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக் கொண்டு இருக்கும் மும்பை நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.