சாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய கர்நாடகா ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாமியார் நித்தியானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 50 முறை நித்தியானந்தா வாய்தா வாங்கியிருக்கிறார்.
இந்நிலையில் நித்தியானந்தா மீதான வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நித்தியானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதின் குன்ஹா, நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை கடந்த வாரம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ராம்நகர் நீதிமன்றம் உறுதி செய்தது.
அத்துடன் நித்தியானந்தாவை உடனே கைது செய்யவும் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தா எங்கே பதுங்கி இருக்கிறார்? என்பது குறித்து தகவல் தெரிவிக்க ஏற்கனவே இண்டர்போல் போலீசார் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ரெட் கார்னர் நோட்டீஸ் மூலம் அவரை கைது செய்யவும் கர்நாடகா போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும்.