கர்நாடகாவில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்... குமாரசாமி நாளை ராஜினாமா?
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களிடம் அனுதாபத்தை பெறும் வகையில், முதலமைச்சர் குமாரசாமி நாளை (ஜூலை 8) ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் குமாரசாமி இன்று கர்நாடகா விரைகிறார்.
கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 39 இடங்களை பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே, ராமலிங்கரெட்டி, ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும், அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்தனர். தற்போது வரை இந்த கூட்டணி ஆட்சியில் இருந்து 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலக செயலாளரிடம் கொடுத்துள்ளனர்.
11 கர்நாடக எம்எல்ஏக்கள் மும்பை ஹோட்டலில் முகாம்.. உட்கார்ந்த இடத்திலேயே பாஜகவை தேடி வரும் ஆட்சி!
மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 11 எம்.எல்.ஏக்களும் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகல்களை வழங்கியுள்ளனர். ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி கவிழும் முன்பே, மக்களின் அனுதாபத்தைப் பெற ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், வரும் 12ம் தேதி சட்டசபை கூடும் நிலையில், பாஜகவின் எடியூரப்பா, ஆட்சி அமைக்கும் வேலைகளில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.