பரபரப்பான அரசியல் களத்தில் ஆச்சர்யம்.. பாஜக உறுப்பினர்களுடன் காலை உணவருந்திய கர்நாடக துணை முதல்வர்
பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி இரவு முழுவதும் கர்நாடக சட்டசபையில் தங்கிய பாஜக உறுப்பினர்களுடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா காலை உணவு சாப்பிட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகத்தில் நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் ஆளும் கூட்டணி அரசு எம்எல்ஏ-க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடும் அமளி காரணமாக கர்நாடக சட்டசபை 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே தீர வேண்டும் என்று அடம்பிடித்த பாஜக-வினர், பேரவை நடைபெற்ற போதே ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். இதனையடுத்து நேற்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டார் கர்நாடக ஆளுநர்.
ஆனால் கடும் அமளி காரணமாக பேரவையை இன்று காலை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பாஜக எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் மாநில ஆளுநர், முதல்வர் குமாரசாமிக்கு இன்று பிற்பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.
கெடு விதித்த ஆளுநருக்கு செக் வைக்கும் குமாரசாமி? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டம்
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் வரை சட்டசபையை விட்டு நகர்வதில்லை என முடிவெடுத்த பாஜக எம்எல்ஏ-க்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி நேற்று இரவு முழுவதும் சட்டசபையில் தங்கி அங்கேயே இரவு உணவை முடித்தனர். பின்னர் அவர்கள் தூங்குவதற்கு தேவையான படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகள் கொண்டு வரப்பட்டன.
இரவு டின்னரை முடித்து விட்டு சட்டசபையிலேயே படுக்கை விரிப்புகளை விரித்து போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்கினர். இதனால் விதான் சவுதா வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
Karnataka Deputy Chief Minister G. Parameshwara eating breakfast with BJP MLA Suresh Kumar at Vidhana Soudha in Bengaluru. pic.twitter.com/922GRsVX31
— ANI (@ANI) July 19, 2019
பின்னர் இன்று காலை தூங்கி எழுந்த பாஜக எம்எல்ஏ-க்களில் சிலர் விதான் சவுதா வளாகத்திலேயே நடைபயிற்சியும் மேற்கொண்டனர். இரவு முழுவதும் சட்டசபையிலேயே தங்கிய பாஜக எம்எல்ஏ-க்களை சந்தித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில துணை முதல்வருமான ஜி.பரமேஸ்வரா பேசினார்.
பின்னர் பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமார் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார் துணை முதல்வர் பரமேஸ்வரா. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கங்கணம் கட்டி கொண்டு நிற்கும் பாஜக எம்எல்ஏ-க்களுடன், காங்கிரஸ் மூத்த தலைவர் காலை உணவருந்தியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.