விடுமுறையே தராமல் கொரோனா டூட்டி.. பணி சுமையால் டாக்டர் தற்கொலை.. கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே கொரோனாவால் பணிச்சுமை தாங்காமல் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
இந்நிலையில் எஸ்.ஆர்.நாகேந்திரா என்ற அந்த டாக்டருக்கு விடுப்பு கொடுக்காமல் தொடர்ந்து கொரோனா டூட்டி போட்டதால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக உடன் பணியாற்றிய சுகாதார பணியார்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மருத்துவரின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வைரஸுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை எந்த அழுத்தத்திற்கும் ஆளாக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறைக்கு கர்நாடகா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
எடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு
கொரோனா பணி
கர்நாடகாவில் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் தலைமை சுகாதார அதிகாரியாக பணியாற்றி வந்தவர் எஸ் ஆர் நாகேந்திரா வயது (43). கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அவருக்கு கொரோனா பணி ஒதுக்கப்பட்டது. இவர் கொரோனா தொற்று பரவ தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
கொரோனா பரவும் பயம்
கொரோனா பணி என்பதால் தொற்று குடும்பத்திற்கு பரவி விடுமோ என்று பயந்த நாகேந்திரா தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு பணியாற்றி வந்துள்ளார். அலனஹள்ளியில் தனியாக தங்கியிருந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட போலீசார் இதற்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
பணிச்சுமை காரணம்
இதனிடையே சுகாதார இலக்கை முழுமையாக எட்டவில்லை என்று உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளதை மருத்துவர் முன்னதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அவருடன் பணியாற்றிய சக சுகாதார ஊழியர்கள், அவருக்கு விடுமுறை கொடுக்காமல் தொடர்ந்து வேலை அளிக்கப்பட்டதால் பணி சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டினர்.
விசாரணைக்கு உத்தரவு
இதையடுத்து மருத்துவர் நாகேந்திராவின் மரணம் குறித்து விசாரணைக்கு கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. வைரஸுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை எந்த அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று சுகாதாரத்துறைக்கும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர் நாகேந்திராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கொரோனா முன்கள வீரர்கள் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய வேண்டாம். அவர்களின் பிரச்சினைகளை தங்கள் மேலதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.தான் ஒரு டாக்டர் என்பதால் மருத்துவ வல்லுனர்கள் எந்த அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டதாக சுதாகர் கூறினார்.
அரசு வேலை அறிவிப்பு
கர்நாடகா மாநில சுகாதார அமைச்சர் பி. ஸ்ரீராமுலு "இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். மக்கள் பீதி அடையத் தேவையில்லை" என்று ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் நாகேந்திரா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்றும் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.