விருப்பமான தடுப்பூசியை செலக்ட் பண்ண சாய்ஸ் கொடுங்க...கர்நாடகா அரசுக்கு, டாக்டர்கள் கோரிக்கை!
பெங்களூரு: எந்த தடுப்பூசி போட வேண்டும் என்பதை மருத்துவ, முன்கள பணியாளர்கள் தேர்வு செய்ய அனுமதிக்கும்படி கர்நாடகஅரசிடம், மாநில மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவாக்சின் மீது சந்தேகம் உள்ளது. மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக உணர்கிறார்கள் என்று மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டுமே நம்பகமானவைதான் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனால் கோவாக்சின் இன்னும் இறுதிக்கட்ட பரிசோதனையை முடிக்கவில்லை என்றும் அதனை பயன்படுத்தகூடாது எனவும் மருத்துவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
மருத்துவர்கள் சங்கம் கடிதம்
இந்த நிலையில் தங்களுக்கு எந்த தடுப்பூசி போட வேண்டும் என்பதை மருத்துவ, முன்கள பணியாளர்கள் தேர்வு செய்ய அனுமதிக்கும்படி கர்நாடக அரசிடம், மாநில மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கம், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பாகுபாடு காட்டப்படுகிறது
மாநிலத்தின் பல மாவட்டங்களில் வசிக்கும் மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக உணர்கிறார்கள். சிக்கமகளூரு, ஹாசன், பல்லாரி, சிவமோகா, சாமராஜநகர் மற்றும் தாவங்கரே மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது, கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.
எங்களுக்கு சாய்ஸ் கொடுங்க
அங்கு வசிக்கும் மருத்துவர்கள் தங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டதாக கவலை கொள்கின்றனர். அதே வேளையில் இந்த மாவட்டங்களை தவிர கர்நாடகாவின் பிற மையங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்று வருகின்றன. கோவாக்சினின் மருத்துவ செயல்திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தடுப்பூசி விநியோகத்தில் உள்ள முரண்பாடுகளும் மிகவும் சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. தங்களுக்கு எந்த தடுப்பூசி போட வேண்டும் என்பதை மருத்துவ, முன்கள பணியாளர்கள் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளனர்.
கோவாக்சின் மீது சந்தேகம்
இது தொடர்பாக கர்நாடகா மருத்துவர்கள் சங்க தலைவர் தயானந்த் சாகர் கூறியதாவது:- சோதனை அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்கு பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தடுப்பூசியை தேர்வு செய்வதில் மருத்துவ, முன்கள பணியாளர்கள் விருப்பத்தில் அரசு விட வேண்டும். குறைந்தபட்சம் இடைக்கால பகுப்பாய்வு கட்டத்தை கடந்துவிட்ட தடுப்பூசிகளை அரசு வழங்க வேண்டும். கோவாக்சினின் இடைக்கால பகுப்பாய்வு அறிக்கை கிடைக்காததால் அதன் மீது டாக்டர்கள் சந்தேகம் கொள்கின்றனர். ஆகையால் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான விருப்பம் அதிகரிக்கிறது என்று கூறினார்.
அமைச்சர் விளக்கம்
இதற்கு கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டுமே நம்பகமானவைதான். இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உள்ளது. எனவே சுகாதாரப் பணியாளர்கள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் கோவாக்சினை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.