இப்படியும் ஏமாற்ற முடியுமா.." கீர்த்தி சுரேஷ் "டிபி.." இன்ஜினியரின் 10 லட்சம் காலி.. மிராக்கிள்!
பெங்களூர்: நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் காதல் வலை விரித்த பெண்ணை நம்பி கர்நாடகாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் ரூ.40 லட்சத்தை இழந்திருக்கிறார்.
முதலில் நடிகை கீர்த்தி சுரேஷை போல பேசிய பெண், பின்னர் தனது சுயரூபத்தை காட்டி மிரட்டி அந்த பொறியாளரிடம் பல லட்சம் ரூபாயை பறித்திருக்கிறார்.
தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்தில், பல ரூபங்களில் மோசடி நடைபெறுகிறது என்பதற்கு இச்சம்பவமே சிறந்த உதாரணமாக இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் சொன்ன குட் நியூஸ்..இனி மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு
கீர்த்தி சுரேஷ் முகநூலில் இருந்து..
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வர் ஹிப்பர்க்கி (30). இவர் ஹைதராபாத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். பரமேஸ்வருக்கு வீட்டில் திருமண வரன் தேடி வந்துள்ளனர். இந்நிலையில்தான், பேஸ்புக்கில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை வைத்திருந்த ஒரு கணக்கில் இருந்து ஹிப்பர்கிக்கு 'ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட்' (Freind Request) வந்துள்ளது. பரமேஸ்வரும் அதை ஆர்வமாக ஏற்க, அவருக்கு வினை ஆரம்பித்துள்ளது.
காதல் ரசம் சொட்ட பேச்சு
தன்னை நடிகை கீர்த்தி சுரேஷ் எனக் கூறியே பரமேஸ்வரிடம் அந்தப் பெண் சாட்டிங் செய்ய தொடங்கியுள்ளார். முதலில், தான் நடித்த படங்கள் குறித்தும், அவை எப்படி இருந்தன என்பது குறித்தும் அந்தப் பெண், பரமேஸ்வரிடம் கேட்டுள்ளார். இப்படியாக சென்று கொண்டிருந்த அவர்களின் உரையாடலில், பின்னர் காதல் ரசம் சொட்ட தொடங்கியது. ஒருகட்டத்தில், பரமேஸ்வரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கீர்த்தி சுரேஷ் பெயரில் இருந்த ஃபேக் ஐடி பெண் கூற, குஷியில் துள்ளிக் குதித்திருக்கிறார் பரமேஸ்வர்.
ஐஏஎஸ் படிக்க ஆசை
இதையடுத்து, இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்துள்ளனர். அப்போது பரமேஸ்வரின் செல்போனுக்கு கீர்த்தி சுரேஷின் ஆபாச மார்ஃபிங் புகைப்படங்களை அந்த ஃபேக் ஐடி பெண் அனுப்பியுள்ளார். பதிலுக்கு, பரமேஸ்வரும் தனது அந்தரங்க புகைப்படங்களை அந்தப் பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஒருகட்டத்தில், ஃபேக் ஐடி கீர்த்தி சுரேஷ், தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும், ஐஏஎஸ் படிக்கவே ஆசை என்றும் கூறியுள்ளார். மேலும், ஐஏஎஸ் படிக்க ரூ.10 லட்சம் வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.10 லட்சத்தை பரமேஸ்வர், அந்த ஃபேக் ஐடியின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
மிரட்டலில் இறங்கிய ஃபேக் ஐடி
இந்நிலையில், சில மாதங்கள் கழித்து மீண்டும் தனக்கு ரூ.10 லட்சம் வேண்டும் என அந்த ஃபேக் ஐடி கேட்க, பரமேஸ்வருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, "நீ நேரில் வந்து சந்தித்தால் மட்டுமே பணம் தருவேன்" என பரமேஸ்வரன் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பரமேஸ்வரின் செல்போனுக்கு ஏற்கனவே அவர் அனுப்பிய அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய அந்த ஃபேக் ஐடி, தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இல்லை என்றும், ரூ.30 லட்சத்தை தராவிட்டால் உனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு விடுவேன் எனவும் கூறி மிரட்டினார்.
புகார் - கைது நடவடிக்கை
இதனால் பயந்து போன பரமேஸ்வர், தனக்கு சொந்தமான நிலம், நகைகள் என அனைத்தையும் விற்று அந்தப் பெண்ணின் வங்கிக்கணக்கில் ரூ.30 லட்சத்தை போட்டுள்ளார். ஆனால் மீண்டும் அவர் பணம் கேட்கவே, வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பரமேஸ்வர். இதன்பேரில், சைபர் க்ரைம் பிரிவின் உதவியுடன் அந்தப் பெண்ணின் முகவரியை கண்டுபிடித்த போலீஸார், கர்நாடகாவின் தாசரஹள்ளி பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (35) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரமேஷையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, பரமேஸ்வரிடம் இருந்து பறித்த ரூ.40 லட்சம் பணத்தில் கார், சொந்த வீடு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மஞ்சுளா வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.