கர்நாடகாவில் பயங்கரம்..சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து 15 பேர் உடல் சிதறி மரணம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததில் 15 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் டைனமைட் வெடிபொருளை கல்குவாரிக்கு லாரி ஒன்று ஏற்றி சென்றது. நேற்று இரவு 10.30 மணி அளவில் ஹனசுடு என்ற கிராமத்தின் வழியாக வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வாகனம் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது.
வெடித்த வாகனம்
பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் கிராமத்தில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.. கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. அந்த பகுதி மக்கள் நில நடுக்கம்தான் ஏற்பட்டுவிட்டதாக சாலைகளுக்கு ஒடி வந்தனர். அப்போது தான் வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் சிதறி பலியானதாக முதற்கட்ட தகல்கள் வெளியாகின. ஆனால் படிப்படியாக உயிரிழப்பு அதிகரித்தது.
காயம் அடைந்தனர்
இதனிடையே கல்குவாரிக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற அந்த வாகனம் வெடித்து சிதறியதில் இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள தெரிவிக்கின்றன. உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உதவிகள் தயார்
இதனிடையே ஷிவமோகாவில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட் பதிவில்,.
ஷிவமோகாவில் வெடிவிபத்தில் பொதுமக்கள் உயிரிழந்த தகவல் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றார்.
எடியூரப்பாவின் தொகுதி
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஷிவமோகா தொகுதி முதல்வர் எடியூரப்பாவின் சொந்த தொகுதியாகும். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.