கர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு
பெங்களூரு: கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வதும் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பளிப்பதும் கடந்த 9 ஆண்டுகளில் 2-வது முறையாக நடைபெற்றுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏக்களை பேரம் பேசி வளைத்தால் கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்து விடும். இதனால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வைத்து அரசுக்கு பெரும்பான்மையை இழக்கச் செய்யும் உத்தியை கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன.
இதே கர்நாடகாவில் 9 ஆண்டுகளுக்கு முன்னரும் 16 எம்.எல்.ஏக்களின் 'ராஜினாமா' நாடகம் நடந்தது. அந்த 2010-ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தார்.
கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!
தகுதி நீக்கம் செய்த போபையா
அவருக்கு எதிராக 11 பாஜக எம்.எல்.ஏக்களும் 5 சுயேட்சைகளும் களமிறங்கினர். இதனால் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது 16 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த போபையா தகுதி நீக்கம் செய்தார். இந்த தகுதி நீக்கம் சரி என்றது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா அரசைக் காப்பாற்றுவதற்காக போபையா அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததாக சாடியது. அத்துடன் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க உத்தரவு செல்லாது எனவும் உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
குமாரசாமி அரசுக்கு எதிராக
தற்போதும் அதே போன்ற ஒரு அரசியல் சூழ்நிலைதான் கர்நாடகாவில். இப்போது காங்கிரஸ்- ஜேடிஎஸ் அரசுக்கு எதிராக 16 எம்.எல்.ஏக்கள் முதல்வர் குமாரசாமி அரசு மீது அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் இந்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து குமாரசாமி அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்காமல் இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு
தங்களது ராஜினாமாவை உடனே ஏற்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு, அதிருப்தி எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதை தடுக்கும் வகையில் கொறடா உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது என வழங்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்ய முடியாது
இதனால் கட்சி கொறடா உத்தரவை எம்.எல்.ஏக்கள் மீறினார் என்ற அடிப்படையில் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதையும் மீறி அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அன்று போபையாவுக்கு கிடைத்த தீர்ப்புதான் இன்றைய சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் கிடைக்கும் என்பது உறுதி.