கர்நாடகா அரசு கவிழும் என பேட்டி அளித்த விவகாரம்.. அலேக்காக அந்தர் பல்டி அடித்த தேவகவுடா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரும் என்று பேட்டியளித்திருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா இப்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் வலிமையாக இருக்கும் வரையில் நாங்களும் ஸ்திரமாக இருப்போம் என விளக்கம் அளித்திருக்கிறார் தேவகவுடா.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆட்சி குறித்து கவலையுடன் முதல்வர் குமாரசாமி கருத்துகளை கூறிவந்தார். இதன் உச்சகட்டமாக தேவகவுடா அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேட்டியில் தேவகவுடா கூறியதாவது:
5.5 கோடி கடன் பாக்கிக்காக ரூ.100 கோடி சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்துக்கு இந்த நிலை வந்தது ஏன்?
காங்கிரஸ் மீது அதிருப்தி
கூட்டணி ஆட்சிக்காக காங்கிரஸ் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சி தமது ஆதரவை முழுமையாக வழங்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொள்ளும் முறையை நீங்களே பாருங்கள்.
உன்னிப்பாக கவனிக்கிறோம்
என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகா சட்டசபைக்கு இடைத்தேர்தல் கண்டிப்பாக வந்தே தீரும். எங்களது கட்சியினர் அமைதி காத்து வருகின்றனர். காங்கிரஸ் என்ன செய்யும் என்பதை கவனித்து வருகிறோம்.
கூட்டணியை விரும்பவில்லை
சட்டசபை தேர்தல் முடிவடைந்த போதே குலாம்நபி ஆசாத்தையும் அசோக் கெலாட்டையும் சோனியா காந்தி என்னை சந்திக்க அனுப்பினார். நான் அவர்களிடம் அப்போதே, கூட்டணி அரசு குறித்து எனக்கு அனுபவம் இருக்கிறது.. அதனால் கூட்டணி ஆட்சி தேவை இல்லை என்றேன்.
மல்லிகார்ஜூன கார்கே முதல்வர் வேட்பாளர்
என் மகன் குமாரசாமி முதல்வராக வேண்டும் என்றெல்லாம் நான் விரும்பவில்லை. அப்போது மல்லிகார்ஜூன கார்கே பெயரை முதல்வர் பதவிக்கு நான் பரிந்துரைத்தேன். இதை ராகுல் காந்திக்கு வேண்டுகோளாகவும் நான் வைத்தேன். ஆனால் குலாம்நபி ஆசாத்தான், குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது என்றார். அதனால்தான் நானும் குமாரசாமி முதல்வராக ஒப்புக் கொண்டேன். இவ்வாறு தேவகவுடா பேட்டி அளித்திருப்பது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
காங். பதில்
இது தொடர்பாக பதிலளித்த காங்கிரஸ் தரப்பு, தேவகவுடா தமது பேட்டி குறித்து அவர்தான் விளக்க வேண்டும். எங்கள் பக்கத்தில் இருந்து ஆளும் கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சனையுமே இல்லை என்றது.
கவுடாவின் பல்டி
இதையடுத்து தேவகவுடா விளக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், இடைத்தேர்தல் வரும் என்பது எங்கள் கைகளில் இல்லை. காங்கிரஸ் வலிமையாக இருந்தால் நாங்களும் நிலையான ஆட்சி தருவோம் என அப்படியே மாற்றி கூறியுள்ளார்.