கடனில் மூழ்கிய கர்நாடகா விவசாயியை கோடீஸ்வரன் ஆக்கிய வெங்காயம்.. ஒரே மாதத்தில் ஆச்சர்யம்
பெங்களூரு: வெங்காயம் உரிக்கும் போது மட்டுமல்ல விலையிலும் நிச்சயமாக மக்களை அழ வைக்கிறது. ஆனால் விண்ணைத்தொட்ட வெங்காயத்தின் விலையால், கர்நாடகாவைச் சேர்ந்த கடனில் மூழ்கிய வெங்காய விவசாயி, ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆக மாறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தோதசித்தவ்வனஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி மல்லிகார்ஜூனா வயது 42. இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் தென்மேற்கு பருவ மழை சமயத்தில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார். அவர் அதற்காக 15லட்சத்தை வங்கியில் கடனாக வாங்கி முதலீடு செய்திருந்தார். தனக்கு 5 முதல் 10 லட்சம் லாபம் கிடைக்கும் என்று நம்பி தனது வெங்காயத்தை பாதுகாப்பாக வளர்த்து வந்தார்.
ஆனால் ஊரெல்லாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் அழிந்து போக இவர்து பயிர் அழியவில்லை. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாவின் வெங்காய பயிர் உற்பத்தி பெருமளவு சரிந்தது.
கோடீஸ்வரன் ஆனார்
இதனால் ரூ. 5லட்சம் லாபம் வரும் என்று நம்பிக்கொண்டிருந்த மல்லிகர்ஜூனாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் இந்த ஆண்டு அடித்துள்ளது. வெங்காய விலை 30 ரூபாய்,40 ரூபாய் என்று இல்லாமல் 200 ரூபாய்க்கு உயர்ந்ததால் நவம்பர் மாதம் முடிவதற்கு உள்ளாகவே மல்லிகார்ஜூனா கோடீஸ்வரன் ஆகிவிட்டார்.
கோடீஸ்வரர்
பயிர் கடன் வாங்கி பயிரிட்டு நஷ்டங்களை சந்தித்து வாராக்கடனில் மூழ்கி கிடந்த மல்லிகர்ஜூனா இந்தமுறை எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் அவருக்கு கை கொடுத்துள்ளது. அவருக்கு 240 டன் வெங்காயம் கிடைத்துள்ளது. வெங்காயம் விலை 200க்கு விற்றுள்ளார். இதனால் லட்சங்களில கிடைக்க வேண்டிய லாபம் கோடிகளாக மாறியுள்ளது.
கைவிடாத மல்லிகார்ஜூனா
இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் விவசாயி மல்லிகர்ஜூனா இருக்கிறார். அவர் வசிக்கும் தோதசித்தவ்வனஹள்ளி பகுதி நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள பகுதியாகும். நிலத்தடி நீரும் வற்றிப்போய்விட்டதால் பலரும் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். ஆனால் மல்லிகார்ஜூனா மட்டும் 2004ம் ஆண்டு முதல் மழைக்காலத்தில் வெங்காயத்தை பயிரிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் ஐந்து லட்சம் தான் வருமானம் வருமாம். ஆனால் இப்போது கோடீஸ்வரான வெங்காயம் அவரை மாற்றி உள்ளது.
ஒரே நாளில் மாறியது
ஆனால் இந்த பயணம் எளிதானது அல்ல. வெங்காயம் விலை குறைவாக இருந்ததால் அக்டோபர் வரையிலான காலம் மல்லிகார்ஜூனாவிற்கு மன அழுத்தத்தை தந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் கூறுகையில். "நான் நவம்பர் முதல் வாரத்தில் வெங்காயத்தை விற்றபோது, விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,000 ஆக இருந்தது. அடுத்த சில நாட்களில், இது ஒரு குவிண்டால் ரூ .12,000 ஐத் தொட்டது, "என்று அவர் கூறினார். மல்லிகார்ஜூனாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெங்காயத்தை திருடர்களிடமிருந்து பயிரைக் காக்க காவலர்களை நியமித்துள்ளனர்.