நான் சுகர் பேஷண்ட்யா.. விடுங்க.. கர்நாடக சட்டசபையில் ஒரே வாரத்தில் இத்தனை விஷயங்கள் நடந்துவிட்டதா!
கர்நாடக சட்டசபை இத்தனை வருட அரசியல் வரலாற்றில் பல விசித்திரங்களை கண்டு இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: இத்தனை வருட அரசியல் வரலாற்றில் கர்நாடக சட்டசபை பல விசித்திரங்களை கண்டு இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக நடப்பது போல இதற்கு முன் எப்போதும் கர்நாடக அரசியலில் பிரச்சனைகள் நிகழ்ந்தது கிடையாது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை நடத்துவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது.
இதுதான் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காரணம். கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது காங்கிரஸ் - மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்துள்ளதால், அந்த கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருக்கிறது.
காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்துள்ளது. பெரும்பாலும் கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் உறுதியாக இருக்கிறார். இதற்கு இடையில் கர்நாடக சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் பின் வரும் சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
1. காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டி கே சிவக்குமார் அதிருப்தி எம்எல்ஏக்கள் இருக்கும் மும்பை ஹோட்டலுக்கு சென்று கடந்த வாரம் சண்டை போட்டார். நான் குளிக்க கூட முடியவில்லை. எனக்கு பசிக்கிறது என்று சண்டை போட்ட அவர் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் பேசினார்.
2. இங்கு ஒரு மனிதர் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருக்க அங்கு பாஜக மூத்த உறுப்பினர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தான் இருக்கும் ரிசார்ட்டில் சந்தோசமாக, ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
3. சரியாக 19ம் தேதி, பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் பிரச்சனை செய்ய தொடங்கினார்கள். உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராட்டம் செய்தனர். அன்று இரவு அவர்கள் எல்லோரும் சட்டசபையில் படுத்து தூங்கிய சம்பவமும் நடந்தது. அவசரமாக மெத்தை வாங்கி, 100க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் உள்ளேயே சாப்பிட்டு தூங்கி சட்டசபையை மினி கெஸ்ட் அவுசாக மாற்றினார்கள்.
4. சில எம்எல்ஏக்கள் உள்ளேயே மொபைலில் படம் பார்த்தபடி உறங்கிய நிகழ்வும் நடந்தேறியது... அது விதான் சவுதா இல்லை மக்களே ஒரு மாதிரி வித்தியாசமான சவுதா!
5. சில வருடங்களுக்கு முன் கர்நாடக சட்டசபைக்கு சூனியம் வைத்த நிகழ்வு எல்லாம் நடந்துள்ளது. இதற்காக முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவை எல்லோரும் கிண்டல் செய்வதும் வழக்கம். இந்த சட்டசபை நிகழ்விலும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு இடையில் அதேபோல் ரேவண்ணாவை பலர் கிண்டல் செய்த சம்பவம் நடந்தது.
6. இதனால் கோபம் அடைந்த குமாரசாமி ''அப்படி கருப்பு மை வைத்து சூனியம் வைத்தாவது எங்கள் ஆட்சியை காப்பாற்ற முடியுமா என்று பாஜகதான் சொல்ல வேண்டும்'' என்று விரக்தியில் எழுந்து நின்று கேட்டார்.
7.பாஜகவினர் எங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் , எங்கள் வீட்டிற்கு பணப்பெட்டியுடன் வருகிறார்கள். எங்களை பதவி விலக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புகைப்படங்களை வெளியிட்டனர்.
8. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து பெரிய போஸ்டர்களாக மாற்றி சட்டசபையிலேயே ஆளும் தரப்பு போராட்டம் செய்தது.
9. இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் ரமேஷ் குமார், என்னுடைய மகன் எனக்கு உடல் நிலை சரி இல்லை என்று கவலைப்படுகிறார். நொடிக்கு ஒருமுறை கால் செய்கிறார். இந்த டிராமா எல்லாம் வேண்டுமா என்று கேட்கிறார். என்னால் முடியவில்லை, என்னை விடுங்கள், என்று கெஞ்சும் நிலைக்கு சென்றார்.
10. எப்போதும் துடிப்பாக இருக்கும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் கூட, எனக்கு தூக்கம் வருகிறது என்றார்.
11. இதற்கு இடையில் குமாரசாமி மருத்துவமனையில் சேர்ந்து இருப்பதாக பொய்யான தகவல்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
12. நேற்று இரவு முழுக்க நீண்ட நேர அவை நடந்ததால் உள்ளுக்குள்ளேயே பல எம்எல்ஏக்கள் பிஸ்கெட், சாக்லேட் என்று சாப்பிட்டு பசியை ஆற்றிக்கொண்டார்கள். சிலர் எம்எல்ஏக்கள் சுகர் பேஷண்ட் என்பதால் என்ன செய்வது என்று அறியாமல் கஷ்டப்பட்டார்கள்.
13. இதெல்லாம் நடந்து கொண்டு இருக்க தொடர்பே இல்லாமல் இன்று பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பவாலி எழுந்து, என்னை ஓரினசேர்க்கையாளர்களின் வீடியோவில் இருப்பது போல சித்தரித்து பொய் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள் சிலர், என்று கூறி விட்டு கதறி அழுதார். இவரை சமாதானம் செய்வதா, அவையை நடத்துவதா என்று தெரியாமல் சபாநாயகர் குழம்பிப் போனார்.
14. இதை எல்லாம் பார்த்த பாஜக எம்எல்ஏ சிடி ரவி எழுந்து, ராமாயணம் முடிந்துவிட்டது, மஹாபாரதம் முடிந்துவிட்டது, வேதம், உபநிஷதம் எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்து என்ன கருட புராணமா? சீக்கிரம் அவையை முடியுங்கள் என்று கேட்டார்.
15. இத்தனைக்கும் இடையில் இன்று மதியம் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் சம்பந்தமே இல்லாமல் பணமதிப்பிழப்பு நீக்கம் குறித்து சட்டசபையில் நீண்ண்ண்ண்ட நேரம் பேசி நேரத்தை போக்கிய சம்பவமும் நடந்தது.
கர்நாடக சட்டசபை நகரும் வேகத்தை பார்த்தால்.. சந்திரயான் 2 நிலவை அடைந்த பின்புதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போல இருக்கு!