செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு: கெடு விதித்தார் கர்நாடக சபாநாயகர்
பெங்களூர்: செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே தீர வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.
கடந்த வியாழக்கிழமை தனது அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆனால், காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கூட்டணி கட்சிகளை சேர்ந்த மொத்தம், 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் அரசு கவிழ்வது உறுதி என்பதை அறிந்து வைத்திருந்த ஆளும் கூட்டணி கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசி பேசி, வெள்ளிக்கிழமை இரவு வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாமல் பார்த்துக்கொண்டனர்.
இதற்கு மேலும் தாமதித்தால் எனது பெயர் கெட்டுவிடும் என அறிவித்த சபாநாயகர், ரமேஷ்குமார், திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். அதற்கு மேலும் தள்ளி வைக்க முடியாது என அறிவித்தார்.
இன்று அவை கூடியதும், ஆளும் கட்சி உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேச ஆரம்பித்தனர். ஆனால், இரவு 7 மணிவரை நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. திடீரென பாஜகவினரை கண்டித்து காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் கோஷமிட்டதால், சபாநாயகர் அவையை 10 நிமிட காலம் ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு கிளம்பி சென்றார்.
முன்னதாக காலை மற்றும் மதியம் என 2 முறை முதல்வர், சபாநாயகரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை இரு நாட்கள் தள்ளி வைக்க கோரிக்கைவிடுத்தார். ரேவண்ணா உள்ளிட்ட அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் இன்றே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, வலியுறுத்தினார்.
இதையடுத்து பாஜக சார்பில் மூத்த எம்எல்ஏக்கள் சபாநாயகரை, சந்தித்து ஆலோசனை நடத்தினர். இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கைவிடுத்தனர். மீண்டும் சட்டசபை 8 மணிக்கு கூடியது. இதன்பிறகும் ஆளும் கட்சி உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசியபடியே இருந்தனர்.
இரவு 10.20 மணியளவில், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து, எம்எல்ஏக்களில் பலரும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள். எனவே இரவு சாப்பாடுக்கு சபாநாயகர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து சபாநாயகரின் செயலாளர், ரமேஷ்குமாரிடம் சில நிமிடங்கள் ஏதோ பேசினார். இதையடுத்து சபையில் பேசிய ரமேஷ் குமார், சட்டசபையில் உள்ள 2 கேன்டீன்களும் பூட்டப்பட்டு விட்டது. இந்த நேரத்தில், வெளியே உள்ள ஹோட்டலில் இத்தனை பேருக்கும் சாப்பாடு கிடைக்குமா என்பதும் தெரியாது. நான் முயற்சி செய்கிறேன் என்றார். இதனால் பசியோடு எம்எல்ஏக்கள் அவைக்குள் இருந்தனர். ஆனால் சாப்பாடு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இரவு 11.45 மணியளவில், அவையை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் கெடு விதித்து, அவையை ஒத்தி வைத்துள்ளார். நாளை அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அவர்களுக்கு விப் உத்தரவை பிறப்பித்து அரசை காப்பாற்ற காங்கிரஸ், மஜத திட்டமிட்டுள்ளதாகவும், எனவே நாளை அரசை காப்பாற்றிவிடலாம் என்று நம்புவதாகவும் கூறப்படுகிறது.