நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி.. ராஜினாமா செய்தார் குமாரசாமி.. காபந்து முதல்வராக தொடர்வார்!
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநரை சந்தித்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்த நிலையில் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக தொடரும்படி குமாரசாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவி உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் - மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்ததால், அந்த கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
'எம்.எல்.ஏக்கள் ராஜினாமா' நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்ட பாஜக!
காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்தது. பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது. இதனால் அம்மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது.
Karnataka Governor, Vajubhai Vala accepts HD Kumaraswamy's resignation. pic.twitter.com/AVuD082In4
— ANI (@ANI) July 23, 2019
ஆனால் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் குமாரசாமி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் ஒரு வழியாக இன்று கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதன்படி முதலில் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்கள் யார் என்று எண்ணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு எதிரான எம்எல்ஏக்கள் யார் என்று எண்ணப்பட்டது.
கடைசியில் முடிவுகள் சபாநாயகர் ரமேஷ் குமார் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் பெரும்பான்மை இல்லாமல் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்த நிலையில் குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர் வஜுபாய் வாலா புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக தொடரும்படி குமாரசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததால் எடியூரப்பா ஆட்சியமைக்க நாளை உரிமை கோர முடிவு செய்துள்ளார். நாளை மறுநாள் முதல்வராகப் எடியூரப்பா பொறுப்பு ஏற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.