காவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை?
Recommended Video
பெங்களூர்: தென் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கட்டி வரும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அணை கட்டுவதை தடுக்க தேவையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
தென்பெண்ணை ஆறு பின்புலம் என்ன, இந்த ஆறால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கிறது என்று அறிந்தால்தான், அணைக்கட்டின் பாதிப்பையும், உணர முடியும்.
இதோ அதுகுறித்து ஒரு பார்வை: பெங்களூரையடுத்துள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி ஹில்ஸ் பகுதியில் உற்பத்தியாகிறது தென்பெண்ணை ஆறு. அங்கேயிருந்து, புறப்பட்டு, கர்நாடக எல்லையை தாண்டி, தமிழகத்தில் முதலில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைகிறது. பின்னர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து சென்று, வங்கக் கடலில் தென்பெண்ணை சங்கமிக்கிறது.
பெரிய ஆறு
ஆக மொத்தம் சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் இந்த ஆறு பயணிக்கிறது. தமிழகத்தை பொறுத்தளவில், காவிரிக்கு அடுத்தபடியாக, நீண்ட தூரம் பாயக்கூடிய 2வது பெரிய, ஆறு தென்பெண்ணைதான். நந்தி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரே இவ்வளவு தூரம் பயணிக்கிறதா, என்றால் இல்லை. ஆற்றின் குறுக்கே, சின்னார், மார்கண்டேயா, வன்னியார் மற்றும் பம்பார் ஆறுகளின் தண்ணீரும் தென்பெண்ணையில் வந்து கலந்துதான் இவ்வளவு நீளத்திற்கு அது பெருக்கெடுத்து ஓடுகிறது.
கிருஷ்ணகிரி பாசனம்
தென்பெண்ணை ஆற்று நீரை உபயோகமாக பயன்படுத்த, 1995ம் ஆண்டு, ஓசூர் அருகே, கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டது. இதில், 481
மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையில் இருந்து, 21.99 கி.மீ நீளமுள்ள வலது கால்வாய்,, 25.5 கி.மீ நீளமுள்ள இடது கால்வாய், வெட்டப்பட்டு, 2005 முதல், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள 22 கிராமங்களில், 8,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
தருமபுரி
பிறகு இந்த ஆற்று நீர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையை வந்தடைகிறது. இடையில், 10 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதில் சேமிக்கப்படும் நீரால், 1,083 ஏக்கர் பாசனம் பெறுகிறது. பிறகு இந்த நீர் தர்மபுரி மாவட்டம், எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டிற்கு வந்தடைகிறது. இதனால் 41 கிராமங்களில், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம்
எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கீழ்செங்கப்பாடி வரை, தென்பெண்ணையாற்றின் குறுக்கே குமாரம்பட்டி, தாம்பல் ஆகிய இடங்களில், இரு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தலா, 115.99 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பின்னர் இந்த தண்ணீர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணைக்கு செல்கிறது. இந்த அணையின், இடது புற கால்வாயால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில், 24,000 ஏக்கரும், வலது புற கால்வாயால், 21,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.
திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர் திட்டம்
இதுமட்டுமல்ல, திருக்கோவிலுார் பகுதியில், 5,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 88 ஏரிகளில் இந்த தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு 5,100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை நகரம், தானிப்பாடி, சாத்தனுார் மற்றும் வாணாபுரம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 322 மில்லியன் கன அடி நீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மழைக்காலங்களில் வீணாக இந்த ஆற்று நீர் கடலில் அதிக அளவுக்கு கலக்கிறது. இதை தடுக்க மேலும் பல தடுப்பணைகளை தமிழகம் கட்ட கோரிக்கை வலுத்து வருகிறது.
உச்சநீதிமன்றம்
இந்த நிலையில்தான், தென் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கட்டி வரும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்கோல் பகுதியில் சுமார் 150 அடி உயரத்தில், கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இதை எதிர்த்த தமிழக அரசு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, கர்நாடக அரசின் அணையால் தமிழகத்திற்கு வரக்கூடிய நீரின் அளவு குறையும் வாய்ப்பு உள்ளது. இது பாசன வசதியை நம்பியுள்ள விளை நிலங்களுக்கு மட்டுமல்ல, குடிநீரை நம்பியுள்ள மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.