7ம் வகுப்பு வரை.. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது.. கர்நாடக அரசு அதிரடி முடிவு
பெங்களூர்: 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று கர்நாடக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. இந்த நிலையில் பள்ளிகள் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களை ஆன்லைன் வகுப்புகள் மூலமாக துவங்கியுள்ளன பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள்.
கர்நாடகாவின் பிற பகுதிகளிலும், கணிசமான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி விட்டன. இதனால் லேப்டாப் அல்லது செல்போன்களுடன் குழந்தைகள் காலையிலேயே அமர்ந்து விடுகின்றனர்.
தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 வீதம் 13.48 கோடி துணி முக கவசங்களை வழங்க அரசு முடிவு
கிராமப்புறங்கள்
இந்த நிலையில், கிராமப்புறங்களில் இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் வசதியில்லாத சிறுவர்-சிறுமிகள் அவதிப்படுவார்கள் என்பதும், அவ்வாறு வசதி இருந்தாலும், தொடர்ச்சியாக எலக்ட்ரானிக் பொருட்கள் முன்பாக அமர்ந்து இருந்து வகுப்புகளை கவனிப்பது அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தத்தை கொடுக்க கூடியது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
மருத்துவ குழு பரிந்துரை
இதையடுத்து பெங்களூரில் உள்ள மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் இன்ஸ்டியூட் (NIMHANS) சேர்ந்த மருத்துவ குழுவினர் இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டனர். அவர்கள் 6 வயது வரையிலான குழந்தைகள் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் செல்போன் அல்லது எலெக்ட்ரானிக் உபகரணங்களை முன்பாக உட்கார்ந்து இருப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்று ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
5ம் வகுப்பு
இந்த அறிக்கையை தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் துவக்கக் கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் அளித்த பேட்டியில், எல்கேஜி, யுகேஜி மற்றும் துவக்கப்பள்ளி அதாவது ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை
வகுப்பறை பாடங்களுக்கு மாற்றாக இது அமையாது. சிறு வயதில் இது போன்ற ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு ஆபத்தானது என்பதால் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
அதேநேரம் ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி கற்றுக் கொடுப்பதில் தடை இல்லை. வீடியோக்களாக பாடங்களை பதிவு செய்து அவற்றை அனுப்பி வைத்து படிப்பதும் பிரச்சினை கிடையாது.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள்
தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இதுபோல பொதுத்தேர்வுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். இவ்வாறு சுரேஷ்குமார் மேலும் தெரிவித்தார். தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி உள்ளன. அங்கும் குழந்தைகளுக்கான வகுப்புகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Recommended Video
7ம் வகுப்பு வரை
இதனிடையே, இன்று மதியம், நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக சட்டத் துறை அமைச்சர் மாதுசாமி, கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கும் ஆன்லைன் கிளாஸ் எடுக்க கூடாது என முடிவெடுத்துள்ளோம். வரும் வெள்ளிக்கிழமை, அமைச்சரவையில் இந்த முடிவு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.