கிரிஷ் கர்னாட் மறைவு.. கர்நாடகாவில் 3 நாள் அரசுமுறை துக்கம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பெங்களூர்: ஞானபீட விருது பெற்ற பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் மறைவையொட்டி, கர்நாடகாவில் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று, முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிஷ் கர்னாட், தமிழில், காதலன், காதல் மன்னன், மின்சார கனவு, ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதேபோன்று ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் அவர் தனது நடிப்பு முத்திரையை பதித்துள்ளார்.
சமீபத்தில் கன்னட எழுத்து துறைக்கான ஞானபீட விருது பெற்றவர்களில் கிரிஷ் கர்னாட் ஒருவர். 81 வயதான கிரிஷ் கர்னாட், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார். இது கர்நாடக எழுத்துலக மற்றும் திரையுலகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த எழுத்துலகத்திற்கும், பேரிழப்பாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசு வரும் 12ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்க, உள்ளதாகவும், எனவே அரசு நிகழ்ச்சிகள் எதுவுமே நடைபெறாது என்றும் முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
நாளை மறுநாள் புதன்கிழமை, கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.
ஆனால் அரசு அறிவிப்பு வெளியாகும் என்பதற்காகவே முன்பாகவே பள்ளி கல்லூரிகள் தொடங்கி விட்டதால், இந்த உத்தரவை செயல்படுத்த முடியவில்லை. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள், வழக்கம் போல, நாள் முழுக்க கல்வி நிலையங்களில் கல்வி பயின்று விட்டு மாலையில்தான் வீடு திரும்பினர்.