கர்நாடகாவில் சுடுகாட்டிலும் காத்திருக்க வேண்டிய அவலம்.. சொந்த இடங்களில் உடலை தகனம் செய்ய அனுமதி
பெங்களூரு: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்கள் அல்லது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் தகனம் அல்லது அடக்கம் செய்யக் கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மற்ற மாநிலங்களைப் போலவே கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனப் பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவைப் பல மருத்துவமனைகள் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்காததற்காக 66 மருத்துவமனைகளுக்குப் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது பெங்களூருவில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவையைச் சமாளிக்கக் 1,500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை தினசரி அனுப்புமாறு கர்நாடக மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழந்தவர்களின் உடலைத் தகனம் செய்வதில்கூட சிக்கல் எழுந்துள்ளது. உயிரிழந்தவரின் உடலை வைத்துக் கொண்டே பல மணி நேரம் வரை காத்திருக்கும் அவல சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்கள் அல்லது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் தகனம் அல்லது அடக்கம் செய்யக் கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.