சூப்பர்.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்ல இ-பாஸ் தேவையில்லை.. 14 நாட்கள் வீட்டு தனிமை போதும்
பெங்களூர்: இ பாஸ் வைத்திருந்தாலும் தமிழக வாகனங்களை தனது எல்லைக்குள் விடாத கர்நாடகா, தற்போது பாஸ் கூட தேவையில்லை.. நீங்கள் கர்நாடகா வரலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி, அங்கிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஒருவேளை கட்டாயம் செல்ல வேண்டும் என்றாலும் கூட 14 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக வேண்டும். வீட்டிலேயே இருக்கிறேன் என்றாலும் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.
சென்னையில் கட்டுக்குள் வராத கொரோனா... 2 மாதங்களில் 3 முறை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர்
சேவா சிந்து வெப்சைட்
ஜூன் 1ம் தேதி முதல் விதிமுறைகளை மாற்றி அறிவித்து உள்ளது கர்நாடக அரசு. இதில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டும் அதிக கெடுபிடி காட்டப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற அனைத்து மாநிலங்களுக்கும், ஒரே மாதிரியான விதிமுறை தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு பாஸ் தேவை கிடையாது. தேநேரம், Seva sindhu என்ற வெப்சைட்டிற்கு சென்று எந்த தேவைக்காக நீங்கள் கர்நாடகா செல்கிறீர்கள் என்பதையும், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் நிரப்புதல் கட்டாயம். அவ்வாறு நிரப்பினால் போதும், அதன்பிறகு, அந்த வெப்சைட்டில் ஒப்புதல் கூட பெறத் தேவையில்லை. இதுதான், லிங்க்
14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்துதல்
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை எளிமையாக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. அதேநேரம் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் பெங்களூர் மற்றும் கர்நாடகாவில் எந்த பகுதிக்குச் சென்றாலும்கூட 14 நாட்கள் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து தாங்கள் வந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய தகவலை, 2 அண்டை வீட்டார்களுக்கு தெரியப்படுத்துதல் கட்டாயம். அப்பார்ட்மென்ட் அல்லது, குடியிருப்பு பகுதி என்றால் குடியிருப்பு சங்கத்திடம் இதுபற்றிய தகவல் முறைப்படி தெரிவிக்கப்பட வேண்டும். மேலும், அவர்களது வீட்டு வாசலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்படும். இந்த 14 நாட்களுக்குள் வீட்டை விட்டு வெளியே வந்தால், விதி மீறலாக கருதப்பட்டு, உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள்.
அறிகுறி இருந்தால்
மாநில எல்லையில் வைத்து, கொரோனா பரிசோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். கொரோனா அறிகுறி இருந்தால், நோயாளிகளுக்கு ஏழு நாள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் கட்டாயம். ஒருவேளை கொரோனா உறுதியானால், அந்த பயணிகள் பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். நெகட்டிவ் என வந்தால், மேலும் சோதனை தேவையில்லை.
மகாராஷ்டிரா பயணிகள்
மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்கள் என்றால், நோய் அறிகுறியற்ற பயணிகளுக்கு கூட ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாகும், அதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் செய்யப்படும். அறிகுறியில்லாவிட்டால் மகாராஷ்டிராவிலிருந்து வரும் சிறப்பு வகை பயணிகளுக்கு மட்டும் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும், 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தால் போதும். கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் சிறப்பு வகை பயணிகளாக கருதப்படுவார்கள். உறவினரின் இறப்புக்காக கர்நாடகா செல்வோரும், சிறப்பு வகை பயணிகளாக கருதப்படுவார்கள்.
வணிகர்கள்
மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவிற்கு வர்த்தக தேவைகளுக்காக வரும் பயணிகளின் கைகளில் சீல் குத்தப்படாது. அவர்கள் வந்த ஏழு நாட்களுக்குள் திரும்பிச் செல்வதற்கான கன்பார்ம் ரிட்டர்ன் டிக்கெட்டை ஆதாரமாக காட்டுதல் கட்டாயம். ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற லேப்களில் ஏதாவது ஒன்றில், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்று வந்தாலும், அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் லேப் டெஸ்ட் முடிவு 3 நாட்களுக்குள் கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மகாராஷ்டிரா தவிர்த்த பிற அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரும் பயணிகள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.