கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா
பெங்களூரு: கர்நாடகா நிலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அறிக்கை அனுப்பியிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லை என 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
ஆனால் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது முடிவெடுக்கலாம் என கூறியிருந்தது.
இதனிடையே கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என ஆளுநர் வஜூபாய் வாலா 2 முறை காலக்கெடு நிர்ணயித்தார்.
இதை சபாநாயகர் ரமேஷ்குமார் நிராகரித்துள்ளார். அத்துடன் உச்சநீதிமன்றத்தில் கொறடா உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் முதல்வர் குமாரசாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கர்நாடகா நிலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.