கர்நாடகா அரசுக்கு சவால்விடும் போதை மருந்து கடத்தல் கும்பல்- ஒழிக்கப்படுவது எப்போது சாத்தியம்?
பெங்களூரு: கர்நாடகா அரசுக்கு சவால்விடும் வகையில் போதை மருந்து கடத்தல் சம்பவங்கள் கொடிகட்டிப் பறப்பதாக பல்வேறு தரப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக 272 மாவட்டங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில் கர்நாடகாவின் பெங்களூரு நகர்ப்புறம், கோலார், மைசூரு, உடுப்பி, ராமநகரா மற்றும் குடகு பகுதிகளும் அடங்கி உள்ளன.
கர்நாடகா சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பேசிய அமைச்சர் பசவராஜ் பொம்மை, போதை பொருள் கடத்தல் கும்பலை ஒடுக்குவதில் அரசு தீவிரமாகவே இருக்கிறது. உளவுத்துறை தகவல்களையும் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக கறுப்பு ஆடுகளையும் அடையாளம் காண்போம் என் சூளுரைத்திருந்தார். ஆனால் தற்போதுவரை கர்நாடகாவில் நிலைமை எதுவும் மாறவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கொரோனா வைரஸ் என்பது வரும் போகும்.. ஆனால் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்பது நிரந்தரமான வைரஸ். கர்நாடகா அரசின் போதை பொருள் கடத்தலுக்கு எதிரான யுத்தம் என்பது பேப்பர்களில் அறிக்கைகளாக மட்டுமே இருக்கிறது. ஆதாரங்கள் கைகளில் இருந்தும் கூட நடவடிக்கை எடுக்க கூட இயலாத நிலையில்தான் போலீசார் இருக்கின்றனர் என்கின்றனர்.
பிஎம் கேர் நிதி.. 5 நாளில் ரூ. 3076 கோடி. கொடுத்தது யார் யார்.. டீட்டெய்ல் கேட்கும் ப.சிதம்பரம்!
கடந்த் 2018-ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அசோகா தலைமையிலான குழு, பெங்களூர் போலீஸ் கமிஷனர் சுனில் குமாரை சந்தித்து போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக தனிப்படை அமைக்க வலியுறுத்தியது. ஆனாலும் இந்த போதைப் பொருள் கடத்தல் மாஃபியா இன்னமும் கொடிகட்டித்தான் பறக்கின்றனர் என சுட்டிக்காட்டுகின்றனர் பெங்களூரு மூத்த பத்திரிகையாளர்கள்.
சட்டசபையில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை எழுப்பினாலே, புள்ளி விவரங்களைத்தான் அரசு முன்வைக்கிறது. கர்நாடகா உள்துறை அமைச்சக அறிக்கையின்படி ஜனவரி மாதம் முதல் மொத்தம் 1438 போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 1798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இவர்களில் 25 பேர் வெளிநாட்டவர். பெங்களூருவைப் பொறுத்தவரையில் போதைப் பொருளில் அதிக அளவில் நைஜீரிய நாட்டவர்தான் ஈடுபடுவதாக முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.