சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம்
Recommended Video
பெங்களூரு: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர அம்மாநில முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்நது நடைபெற்று வருகின்றன. கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுவை உள்ளிட்ட மாநில சட்டசபையில் சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சி.ஏ.ஏவை எந்த ஒரு சூழ்நிலையிலும் திரும்பப் பெறப் போவது இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவருவதற்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சி.ஏ.ஏ. குறித்து கருத்து தெரிவித்திருந்த எடியூரப்பா, இச்சட்ட திருத்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறியிருந்தார்.
ஆனால் கர்நாடகா சட்டசபையில் இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்க்கவும் முடிவு செய்துள்ளன.