கர்நாடக கிராம பஞ்சாயத்து தேர்தல்.. விவசாயிகள் பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர்.. சித்தராமையா தாக்கு
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜகவுக்கு கிராமப்புற மக்கள் பதிலடி கொடுத்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் டிசம்பர் 22 மற்றும் 27ம் தேதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், 117 தாலுகாக்களில் 3019 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. 1.17 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் கட்டமாக, 109 தாலுகாக்களில் 2,709 பஞ்சாயத்துகளுக்கு, டிசம்பர் 27 அன்று தேர்தல் நடைபெற்றது. இங்கே, 1,05,431 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இரண்டு கட்டங்களையும் சேர்த்தால், 226 தாலுகாக்களில் 5,728 கிராமங்களில், 72,616 உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் முக்கியமானவையாகும். இருப்பினும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் இந்த கட்சி சின்னங்களில் போட்டியிடவில்லை. ஆனால் வேட்பாளர்களுக்கு கட்சிகள் ஆதரவு வழங்கின.
நேற்று காலை முதல் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்திய டேட்டாக்கள்படி, பாஜக ஆதரவு வேட்பாளர்கள் 27,075 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர்கள் 25,868 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் 15,916 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா கூறுகையில், 60 சதவீத பாஜக ஆதரவு வேட்பாளர்கள் கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர், எண்ணிக்கை இன்னும் நடைபெற்று வருகிறது. பாஜக 3,600 கிராம பஞ்சாயத்துகளை வென்றுள்ளது என்றார்.
இருள் அகலட்டும்... கவலைகள் நீங்கட்டும்... அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து..!
பாஜக அரசு செயல்படுத்தும் கொள்கைகளால் கிராமப்புற இந்தியா விரக்தியடைந்து வருவதாக முன்னாள் கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். "விவசாயிகள் மற்றும் விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக மக்கள் உள்ளனர். கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் மூலம் பாஜகவுக்கு பாடம் கற்பித்துள்ளனர். காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, " என்றார்.
பாஜக-காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இது தங்களுக்கான வெற்றி என்று கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.