மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை... சொல்வது டி.கே சிவக்குமார்
பெங்களூரு: கர்நாடகா அணைகளில் நீர் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் உள்ளதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து சுமார் 13 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
நிபா வைரஸ்: மக்களே எச்சரிக்கையா இருங்க.. பயப்படாதீங்க.. பதற்றப்படாதீங்க.. கேரள முதல்வர் வேண்டுகோள்!
நீர் வரத்து குறைவு
இதனால், அணைக்கு, நீர் வரத்து குறைவாக உள்ளதால், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர்
நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே ஆணையம் உத்தரவிட்டுள்ள நீரை முழுமையாக தமிழகத்திற்கு திறந்து விட முடியும் . தொடர்ந்து இதே நிலை நீடித்தால், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஒழுங்காற்று குழுவின் மூலமாக ஆணையத்திற்கு தெரிவிப்பார்கள்.
நாளை சிறப்பு பூஜை
இது தவிர கர்நாடகத்தில் பருவமழை நன்கு பெய்ய வேண்டி நாளை சிறப்பு பூஜை நடத்த இருக்கிறோம். மேகதாது அணை திட்டம் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக எம்.பி.க்கள் கட்டாயம் விவாதம் நடத்த மாநில அரசு வலியுறுத்தும். கர்நாடக அரசு தற்போது வரை செய்துள்ள பணிகள் குறித்த அனைத்து தகவல்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும்.
எங்களுக்கு கவலை இல்லை
தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சுமார் ரூ.9,500 கோடி மதிப்பிலான திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல அணை கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சாத்தியக்கூறு அறிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
எந்தப் பயனும் இல்லை
மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை. முழுமையான பயனைப் பெறப்போவது தமிழகம் தான். இதை நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். ஏற்கனவே மேகதாது அணை குறித்து நிதின் கட்காரியை சந்தித்து விளக்கம் அளித்துள்ளோம். அதனால் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மேகதாது அணை கட்ட மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் தர வேண்டும்.