சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்: டுவிட்டர் இந்திய இயக்குனரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை!
பெங்களூரு: சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க மறுத்த விவகாரத்தில் டுவிட்டர் இந்திய இயக்குனரை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 72 வயது முதியவர் அப்துல் சமத் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் தரதரவென இழுத்துச் சென்று அடிப்பதும், தாடியை சேவ் செய்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
மத ரீதியாக அவர் தாக்கப்பட்டாக இந்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டன. ஆனால் காசியாபாத் போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் மதரீதியாக நடைபெறவில்லை என்றும் தனிப்பட்டவிரோதம் காரணமாக முதியவர் தாக்கப்பட்டதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து சர்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கும்படி உத்தர பிரதேச அரசு, மத்திய அரசு டுவிட்டரிடம் கேட்டுக் கொண்டது.
ஆனால் டுவிட்டர் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கவில்லை. இதனால், டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டுவிட்டர் இந்தியா" நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரியை நேரில் ஆஜராக உத்தர பிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள்.
இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனீஷ் மகேஷ்வரி, போலீசார் தன்னை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்து விட்டதாகவும் காணொளி மூலமாக ஆஜராவதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய கூடாது என்று காசியாபாத் போலீசாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொளி மூலமாக அவரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.