திப்பு ஜெயந்திக்கு எடியூரப்பா அரசு தடை.. மறுபரிசீலனை செய்க.. பாதுகாப்பு கொடுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு சார்பில் தீர்ப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்கு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைசூர் புலி என்று அழைக்கப்படக்கூடிய திப்பு சுல்தான், சுதந்திர போராட்ட வீரர் என்பதால் அவரது பிறந்த நாளை அரசு சார்பில் விழாவாக நடத்துவோம் என்று சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்தது.
2015ஆம் ஆண்டு முதல், டிசம்பர் 10ஆம் தேதியான, திப்புசுல்தான் ஜெயந்தியை கர்நாடக அரசு, அரசு விழாவாக கடைபிடித்து வந்தது. கடந்த வருடம் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
அமித் ஷாவிற்குத்தான் திறமை இருக்கே.. ஆட்சியை பிடிங்க பார்க்கலாம்.. சவால் விடும் சரத் பவார்!
வலதுசாரி அமைப்பு
இந்த நிலையில், திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக கொண்டாட முடியாது என்று கூறி அரசாணை பிறப்பித்தது எடியூரப்பா தலைமையிலான தற்போதைய பாஜக அரசு. திப்பு சுல்தான் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்பது பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினரின் வாதமாக இருந்து வருவதால், திப்புசுல்தான் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு நாடு முழுக்கவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக ஹைகோர்ட்
எனவே பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது கிடையாது. இந்த நிலையில்தான் எடியூரப்பா அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தனி நபர் கொண்டாடலாம்
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நாவடகி, ஆஜராகி, திப்புசுல்தான் ஜெயந்தியை, தனி நபர்களும், அமைப்புகளும் கொண்டாடுவதற்கு மாநில அரசு தடை விதிக்கவில்லை. மாநில அரசின் சார்பில் தான் கொண்டாடப்படுவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். இந்த விழா கடந்த நான்கு வருடங்களாகத்தான் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நிறுத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு
இந்த நிலையில் இரண்டு மாதங்களில் மாநில அரசு இது தொடர்பாக உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம், வரும் ஜனவரி மாதத்திற்குள் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்கு மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது, திப்பு ஜெயந்தியை கொண்டாடுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசை ஹைகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வருடம் கலாட்டா
உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்கு எடியூரப்பா அரசு மறுபரிசீலனை செய்யுமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களை சொல்லி தனது முடிவில் உறுதியாக இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். கடந்த வருடம் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழாவில், வலதுசாரி அமைப்பினர் கலாட்டாவில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.