கர்நாடகாவில் அடைத்து வைக்கப்பட்ட காங். எம்.எல்.ஏக்களை சந்திக்க திக்விஜய் சிங்குக்கு கோர்ட் நோ அனுமதி
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜகவால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்குக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் 16 எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் இந்த எம்.எல்.ஏக்கள்.
இவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பாஜக தரப்பில் அம்மாநில சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகரோ, எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து தங்களது நிலைமையை தெரிவிக்க வேண்டும் என்கிறார். இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டசபையில் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில் கர்நாடகாவின் பெங்களூருவில் அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சந்திக்க அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் முயற்சித்தார். ஆனால் அவருக்கு அனுமதி கொடுக்கப்படாததால் அவர் போராட்டம் நடத்தினார். இதனால் திக்விஜய்சிங் கைது செய்யப்பட்டார்.
அடுத்த பகீர்.. காற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்
இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்களை சந்திக்க அனுமதி கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திக்விஜய்சிங் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏக்களை சந்திக்க திக்விஜய்சிங்குக்கு அனுமதி மறுத்தது.