சுகாதாரத் துறை அமைச்சரே இப்படி இருந்தால்.. கர்நாடக மக்கள் நிலைமை கஷ்டம்தான்.. தொடரும் சர்ச்சை
பெங்களூர்: ஒரு மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் இப்படி இருக்கலாமா என்று மக்கள் கேள்விக் கணைகளை தொடுக்கும் அளவுக்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறார், கர்நாடக மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு.
இன்று அவர் தாவணகெரே மாவட்டம், லட்சுமிபுராவில் நடந்த ஹடஹளி தொகுதியின் எம்.எல்.ஏ பி.டி.பரமேஸ்வர் நாயக் (காங்கிரஸ்) மகனின் திருமணத்தில் பங்கேற்றார். அப்போது, அவர் முகக் கவசம் அணியவில்லை. சமூக விலகலை பின்பற்றாமல் அனைவருடனும் கை குலுக்கி நெருங்கி பழகினார் ஸ்ரீராமலு.
ஜூன் 2 ம் தேதி, சித்ரதுர்கா மாவட்டத்தில், ஸ்ரீராமுலு முகக் கவசம் இல்லாமல் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அங்கு சமூக விலகலை பின்பற்றாமல் இருந்தார். மேலும், ஒரு பெரிய தொண்டர் கூட்டம் அவரை வரவேற்றது. இதுவும் சர்ச்சையாகியிருந்தது.
இந்த திருமணத்தில் ஏராளமான அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோரும் அடங்குவர். ஆளும் பாஜக தரப்பிலிருந்து ஸ்ரீராமுலு தவிர்த்து, அமைச்சர்கள் லக்ஷ்மன் சவதி, பிரபு சவான் ஆகியோரும் வருகை தந்தனர்.
ஒரு திருமணத்தில் விருந்தினர்களாக அதிகபட்சம் 50 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கண்டிப்பாக குறிப்பிட்டுள்ள நேரத்தில், இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு மாவட்ட அதிகாரிகள் எவ்வாறு அனுமதி அளித்தனர் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
பருவமழை காலம்- கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்குமா? இன்னும் உச்சகட்டமாக பரப்புமா?
இதுவரை, காவல் நிலையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை. எனவே காவல்துறை எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை.
ஒரு திருமணத்தை நடத்தும்போது நலம் விரும்பிகளை ஒதுக்கி வைப்பது கடினம் என்று சித்தராமையா கூறியுள்ளார். "சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது, ஆனால் கிராமவாசிகள் அழைக்கப்படாவிட்டாலும் வந்து வாழ்த்தும் வழக்கம் உள்ளவர்கள்" என்று அவர் ஒரு விளக்கத்தை கூறியுள்ளார்.