4 வயசு குழந்தைக்கும் ஹெல்மெட்.. விதியை மீறினால் 3 மாதம் லைசென்ஸ் சஸ்பெண்ட்.. கர்நாடகாவில் ரூல்ஸ்
பெங்களூர்: இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்ல, அதில் அமர்ந்து பயணிக்கும் யாராக இருந்தாலும் நான்கு வயதை கடந்து விட்டால் போதும், ஹெல்மெட் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் மற்றும் ஓட்டுபவரின் டிரைவிங் லைசென்ஸ் மூன்று மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படும்.
இந்த அறிவிப்பு நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் ஒரு கோடியே 60 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 60 லட்சம் வாகனங்கள் அந்த மாநில தலைநகர் பெங்களூரில் பதிவாகி உள்ளது.
ஓடியா ஓடியா...ஒரே ரேட்..பிக்ஸ் பண்ணியாச்சு...ஒரு சீட் ரூ10 கோடி.. கல்லா பொட்டியை திறந்த 'சிங்காரம்'
இருசக்கர வாகனம்
பொதுவாக சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் அதில் உடன் பயணிப்போர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஹெல்மெட் அணிவது இந்த பாதிப்பை குறைத்து உயிர் சேதத்தை தவிர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவேதான் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சட்டம் சொல்கிறது.
கர்நாடக சட்டம்
2019ஆம் ஆண்டு கர்நாடக மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம், மூன்று மாதம் டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதிமுறைகள் இப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அபராதத் தொகை 500 ரூபாய் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு வயதுக்கு மேற்பட்ட சிறுவராக இருந்தாலும் சரி, பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மூன்று மாதம் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் வழக்குகள்
பெங்களூர் நகரில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக 20 லட்சத்து 70 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விதிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது கர்நாடக போக்குவரத்து துறை.
பெங்களூர் போலீஸ்
பெங்களூர் நகர இணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) ரவிகாந்த் கவுடா கூறுகையில் போக்குவரத்து துறையின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பயணிப்போர் ஹெல்மெட் அணிந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று காவல் துறை சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.