முதல்வர் பதவியை விட்டு விலகிய கையோடு புது சிக்கல்.. ஊழல் வழக்கில் எடியூரப்பாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
பெங்களூர்: ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, உறவினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் சோமசேகர் ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பெங்களூரில் வீட்டுவசதி திட்டத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி சமூக ஆர்வலர் டிஜே ஆபிரகாம் என்பவர் வழக்கு தொடரந்தார். ஆனால் ஜூலை 8 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, டிஜே ஆபிரகாம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி சுனில் தத் யாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் மேற்கண்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் வீட்டுத் திட்டத்தை செயல்படுத்த குறிப்பிட்ட ஒரு காண்டிராக்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதற்காக எடியூரப்பா தரப்பு ரூ.12 கோடி லஞ்சமாக பெற்றது குற்றச்சாட்டு. இந்த லஞ்ச விவகாரத்தை ஒரு கன்னட டிவி சேனல் முதலில் வெளிப்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், எடியூரப்பாவும் அவரது மகனும் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தனர், இந்த விஷயத்தில் உண்மை இல்லை என்று கூறினர்.
ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி
எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து கடந்த மாதம் விரைவில் விலகி பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் ஊழல் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.