குன்ஹாவிடம் வசமாக சிக்கிய நித்தியானந்தா.. ஜாமீனை ரத்து செய்து கர்நாடக ஹைகோர்ட் அதிரடி!
பெங்களூர்: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பெங்களூர் அருகே பிடதியில் நித்யானந்தாவுக்கு தியான பீட ஆசிரமம் உள்ளது. இது மட்டுமல்லாது அவருக்கு இந்தியா, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார்.
அவருக்கு கர்நாடக ஹைகோர்ட்டு 2010-இல் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் பிறகு அவர் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி நித்யானந்தாவுக்கு ஹைகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் அந்த மனு நேற்று முன் தினம் ஹைகோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வக்கீல், நித்யானந்தாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், அவரது தியான பீடத்தில் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்
அதன்படி அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். நித்யானந்தா தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து அழைத்து வர 'புளு' கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நித்யானந்தா மீதான போலீஸின் பிடி இறுகியுள்ளது.