எம்எல்ஏக்கள் பலம் இல்லாமல் பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பார் எடியூரப்பா? ஒரே வழிதான் இருக்கு!
Recommended Video
பெங்களூர்: இன்னும் ஒரு வார காலத்திற்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ள நிலையில், ஒரே ஒரு விஷயம் நடந்தால் மட்டுமே எடியூரப்பா அரசால் அதை வெற்றிகரமாக செய்ய முடியும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில், தோற்றதால், கர்நாடக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசு கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது. இதையடுத்து புதிதாக ஆட்சி அமைக்க பாஜக இன்று ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது.
ஆளுநரும் ஆட்சியமைக்க அழைத்ததால், இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளார் எடியூரப்பா.
ஆமா.. எடியூரப்பா ஆட்சியமைக்க முடியாதே.. எப்படி ஆளுநரை சந்தித்தார்.. பாயிண்ட் பிடித்த காங்கிரஸ்
பெரும்பான்மை
இன்னும் ஒரு வாரத்திற்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று எடியூரப்பா தலைமையில் அமையப்போகும் அரசுக்கு ஆளுநர் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேரையும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரையும் சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று இரவு திடீரென தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இன்னும் 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களது ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை.
மேஜிக் நம்பர் 111
எனவே அதிகாரப்பூர்வமாக தற்போது சட்டசபை பலம், 221 என்ற அளவில் குறைந்துள்ளது. எனவே, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் குறைந்தபட்ச மேஜிக் நம்பர் 111 ஆகும். பாஜகவின் சொந்த பலம் 105 எம்எல்ஏக்கள்தான். சுயேச்சை ஒருவரின் ஆதரவையும் சேர்த்தால், 106 எம்எல்ஏக்கள் அக்கட்சிக்கு ஆதரவு.
சட்டசபை வரக்கூடாது
நிலைமை இப்படி இருக்கும்போது, எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் எடியூரப்பா? அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பையில் இருக்கும், 13 அதிருப்தி எம்எல்ஏக்களும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளில், சட்டசபைக்கு வராமல் இருக்க வேண்டும். ஏனெனில், அப்படி நடந்தால், சட்டசபை பலம் வெறும், 205 என்ற அளவில் இருக்கும். அப்போது, 103 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே, பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம்.
வாக்கெடுப்பு நடத்த அவசரம்
அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் காங்கிரஸ் பக்கம் போய் சேர்ந்து கொண்டு சட்டசபைக்கு வந்துவிட்டால், பெரும்பான்மை பலத்தை எடியூரப்பாவால் நிரூபிக்க முடியாது. எனவே, திங்கள்கிழமையே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த யோசித்து வருகிறாராம், எடியூரப்பா.