கர்நாடகா முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. பிற மாநில வாகனங்கள் பெங்களூர் வர கட்டுப்பாடு?
பெங்களூர்: கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று 445 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மொத்த எண்ணிக்கையை 11005 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
மிகவும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வைரஸ் பாதிப்பு என்பது சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. எனவே வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா உறுதியாக இருக்கிறார்.
தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்திற்கான ரூ. 1,950 கோடி டென்டர் ரத்து.. மத்திய அரசு
எடியூரப்பா தலைமையில் ஆலோசனை
இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் எடியூரப்பா. இந்த ஆலோசனையில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூலை மாதம் 5ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெங்களூர் உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது என்று அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மருந்தகங்கள் மற்றும் காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டுமே அன்றைய தினம் இயங்கும். சலூன் கடைகள் உள்ளிட்ட எந்த ஒரு பிற கடைகளும் இயங்காது. அவ்வாறு கடைகள் திறந்து வைக்கப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 நாட்கள் முழு ஊரடங்கு
ஒருவேளை அப்படியும், கொரோனா பரவல் குறையாவிட்டால், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள், முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்று எடியூரப்பா அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நிர்ணயிக்கப்படும். சனி, ஞாயிறுகளில் அவர்களுக்கு விடுமுறை விடப்படும்.
இரவு நேர ஊரடங்கு
மேலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, அனாவசியமாக யாரும் வெளியே வரக்கூடாது என்று இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அது இனிமேல், இரவு 8 மணியிலிருந்து, காலை 5 மணி என்று இரவு நேர ஊரடங்கு மாற்றப்படும். அதாவது, கூடுதலாக ஒரு மணி நேரம் கெடுபிடி அதிகரிக்கப்படுகிறது. ஜூலை 10ம் தேதிமுதல், இந்த உத்தரவு அமலுக்கு வர உள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வாகனம்
அதுமட்டுமின்றி பெங்களூர் நகருக்கு பிற மாநிலங்களிலிருந்து போக்குவரத்து வசதியை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 வாரங்களுக்கு பிற நகரங்களில் இருந்து பெங்களூருக்கு யாரும் வர முடியாதபடி தடை விதிக்கப்படும் என்றும், வைரஸ் பரவல் கட்டப்படுகிறதா என்பதை பார்த்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் அசோக் திட்டவட்டம்
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் அசோக், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு, கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. அது எந்த மாதிரி நடவடிக்கை என்பதை முதல்வர் எடியூரப்பா தெரிவிப்பார். தற்போது கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே, தேர்வுகள் முடிவடைந்த பிறகு இந்த நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிவித்தார். ஜூன் 25ம் தேதி தொடங்கியுள்ள எஸ்எஸ்எல்சி தேர்வு ஜூலை 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு சனிக்கிழமை முடிவடையும் நிலையில், ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மேலே நாம் குறிப்பிட்ட கெடுபிடிகள் அமலுக்கு வர உள்ளதாக கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்எஸ்எல்சி தேர்வுகள்
இதனிடையே, சிபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி தேர்வை ஏன் இப்படி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இப்போதிருந்தே கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினால் பாதிப்பு அளவு குறையும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், பிறகு அது தளர்த்தப்பட்டது. ஆனால் மறுபடியும் அதே உத்தியை அரசு கையில் எடுத்துள்ளது.