புது சர்ச்சை.. சசிகலா மீது குற்றம் சுமத்தினாரே.. ரூபா ஐபிஎஸ்.. பவர்ஃபுல் பதவியிலிருந்து டிரான்ஸ்பர்
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று, பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்மாநில ஐபிஎஸ் அதிகாரி ரூபா முக்கியமான ஒரு பதவியில் இருந்து சாதாரண பதவிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சிலவற்றை கூறிய நிலையில் இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
கர்நாடக சிறைத்துறையில் டிஜிபியாக பணியாற்றினார் சத்யநாராயணராவ். அவர் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு சிறையில் முழு சுதந்திரமாக உலவ அனுமதி வழங்கினார் என்பது அப்போது சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா சொன்ன பரபரப்பு தகவல் ஆகும்.
சசிகலா மீது குற்றச்சாட்டு
இந்த காலகட்டத்தில்தான் சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு சிறைக்குள் வருவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற காலகட்டமாகும். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி முடிந்து பாஜக ஆட்சி, எடியூரப்பா தலைமையில் அமைந்த பிறகு ரூபாவுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது.
வரலாற்று சாதனை படைத்த ரூபா
கர்நாடக வரலாற்றில் முதல்முறையாக உள்துறை செயலாளராக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார் என்றால், அது ரூபா தான். அந்த அளவுக்கு ரூபாவுக்கு முக்கியமான பொறுப்பை வழங்கியிருந்தார் எடியூரப்பா. இந்த நிலையில்தான் பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (நிர்வாகம்) ஹேமந்த் நிம்பால்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை ரூபா சுமத்தியிருந்தார்.
பெங்களூர் சிட்டி
பெங்களூர் பாதுகாப்பு நகரம் ப்ராஜெக்ட் என்ற பெயரில் பல கோடி மதிப்புள்ள ஒரு திட்டத்தை ஹேமந்த் முன்னெடுத்தார். டெண்டர் வழங்கக்கூடிய கமிட்டியின் தலைவராக ஹேமந்த் இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அவர் ஆதரவாக செயல்பட்டதாக ரூபா குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் உள்துறை செயலாளராக இருக்கக்கூடிய ரூபா அனாவசியமாக தலையிடுகிறார் என்று ஹேமந்த் நிம்பால்கர் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கருக்கு ரூபா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
சர்ச்சை
என் மீது கொடுக்கப்பட்ட பொய்யான புகார்கள் பற்றி உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. ஆனால் ஹேமந்த் நிம்பால்கர் மீது ஏன் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. விசாரணை நடத்த சிபிஐ கோரிக்கை விடுத்தும் அவர்களுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்று அதில் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான், நேற்று சில ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது கர்நாடக அரசு. அதில் ரூபா மற்றும் ஹேமந்த் நிம்பால்கர் ஆகிய இருவரும் அடங்கும்.
ரூபா டிரான்ஸ்பர்
ஐபிஎஸ் அதிகாரி ரூபா கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது வகித்துவந்த பதவியை ஒப்பிட்டால் இது மிக மிக அதிகாரம் குறைந்த ஒரு பதவியாகும், ஹேமந்த் நிம்பால்கர், பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் இந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டு உள்பாதுகாப்பு துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது போன்ற மேலும் சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.