காவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு.. ஓரணியில் திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்
பெங்களூர்: காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெள்ளக் காலங்களில் காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனுர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைக்கும் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது.
மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. ரூ.14,400 கோடியில் 262 கி.மீ துரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.
காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.
மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவேரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்.
"இந்துத்துவா வென்றால்தான் தமிழ் வாழும்".. கர்நாடக பாஜக தேஜஸ்வி சூர்யா பகீர் பேச்சு.. கொந்தளிப்பு!
ஆனால் இந்த திட்டத்திற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அங்குள்ள பிற கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எடியூரப்பா இன்று அளித்த பேட்டியில், காவிரியில் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு கர்நாடகா அனுமதிக்காது. வெறும் பேச்சு இந்த விஷயத்தில் பலனளிக்காது. உரிய நடவடிக்கையை கர்நாடக அரசு எடுக்கும் என்றார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இதுபற்றி விவாதிக்க திட்டம் உள்ளதா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, அது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றார்.
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக அரசு காவிரியிலிருந்து அக்கிரமமாக 45 டிஎம்சி தண்ணீரை எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். தமிழக முதல்வருக்கு கர்நாடக முதல்வர் அழுத்தம் கொடுத்து இந்த திட்டத்தை கைவிட செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காவிரி நதியில் இருந்து கூடுதல் நீரை தமிழகம் பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளது. அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது கர்நாடக அரசுக்கு தெரியாமலேயே போய் உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் கர்நாடக பாஜக தமிழகத்தில் இப்படி ஒரு திட்டம் செயல்படுத்த போவதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. கர்நாடக மக்கள் நலனில் பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.