சில வருடங்களில் காணாமல் போகும்.. கர்நாடகாவில் பெரும் சரிவை சந்தித்த மஜத.. அதிர்ச்சி தரும் களநிலவரம்!
கர்நாடகாவில் தொடர் தோல்விகள் மற்றும் தவறான அரசியல் முடிவுகளால் மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி மிக மோசமான சரிவை சந்தித்து உள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் தொடர் தோல்விகள் மற்றும் தவறான அரசியல் முடிவுகளால் மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி மிக மோசமான சரிவை சந்தித்து உள்ளது. அம்மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி மொத்தமாக காணாமல் போகும் நிலைக்கு சென்றுள்ளது.
அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று கூறுவார்கள். இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ கண்டிப்பாக கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிக்கு பொருந்தும். ஆம் ஒரு காலத்தில் கர்நாடகாவின் மாற்று கட்சியாக, புதிய புரட்சியாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அதே கட்சி மிக மோசமான சரிவை சந்தித்து, மொத்தமாக காணாமல் போகும் நிலையை நெருங்கி உள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து அந்த கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தனது மதிப்பை இழந்து வருகிறது.
சூப்பர் டூப்பராக வகுத்த வியூகம்.. எடியூரப்பாவின் "அந்த" பிரசாரமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்?
என்ன தேர்தல்
கடந்த சட்டசபை தேர்தலில் மஜத கட்சிக்கு ஜாக்பாட் அடித்தது என்று கூட கூறலாம். அங்கு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து கடைசி நேரத்தில் மஜதவின் தலைவர் குமாரசாமி முதல்வர் ஆனார். ஆனால் அவர் முதல்வராக ஒரு வருடம் மட்டுமே இருந்தார். அதன்பின் ஆபரேஷன் கமலா மூலம் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
மஜத எப்படி
அப்போது மஜதவிற்கு தொடங்கிய சரிவுதான் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆம், கடந்த லோக்சபா தேர்தலிலேயே மஜதவின் வீழ்ச்சி எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்தது. லோக்சபா தேர்தலில் அந்த கட்சி வெறும் 1 இடத்தில் மட்டுமே வென்றது. மிக முக்கியமாக கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இல்லை
அதோடு கட்சியின் எதிர்கால தலைவர் என்று கருதப்படும் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் தான் போட்டியிட்ட தொகுதியில் மிக மோசமாக தோல்வியை தழுவினார். மஜதகட்சியை இந்த தோல்வி மொத்தமாக முடக்கிப்போட்டது. தொண்டர்கள் எல்லோரும் கட்சி மீதான நம்பிக்கையை இழக்க தொடங்கினார்கள்.
மிக மோசமான தோல்வி
இதேபோல் நடந்து முடிந்த 15 தொகுதிசட்டசபை இடைத்தேர்தலில் மஜத மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது. அந்த தேர்தலில் மஜத காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு பாஜக 12 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 2 இடங்களில் வென்றது. மஜத ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. மொத்தமாக அந்த கட்சியை மக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள்.
மிக கோபம்
இந்த தோல்வி குறித்து பேசிய மஜத கட்சியின் செய்தி தொடர்பாளர் தன்வீர் அஹமது, நாங்கள் இது எங்கள் கட்சிக்கான முடிவுரை என்று கூற மாட்டோம். ஆனால் நாங்கள் உடனே செயலாற்ற வேண்டும். இல்லையென்றால் இது எங்கள் முடிவிற்கான தொடக்கமாக இருக்க வாய்ப்புள்ளது, என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது.
பின் வரும் காரணங்கள் அந்த கட்சிக்கும் பெரிய அளவில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வொக்காலிகா ஆதரவு
மஜத தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே வொக்காலிகா பிரிவினர் அந்த கட்சிக்கு அதிக ஆதரவு அளித்து வந்தனர். மஜத வளர்ந்ததற்கு பின் இவர்களின் ஆதரவு இருந்தது என்பதுதான் உண்மை. தற்போது அதே கட்சியின் வீழ்ச்சிக்கு வொக்கலிகா காரணமாக மாறியுள்ளனர். கடந்த லோக்சபா தேர்தல் சட்டசபை இடைத்தேர்தல் இரண்டிலும் மஜத வொக்காலிகாவின் ஆதரவை இழந்துள்ளது.
சரிவு
முக்கியமாக அந்த கட்சி அதிகம் நம்பி இருந்த பழைய மைசூர் பகுதிகளில் மொத்தமாக மக்கள் ஆதரவை இழந்துள்ளது. அங்கு இருக்கும் எந்த தொகுதியிலும் மஜத வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்ததுதான் வொக்கலிகா மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
வொக்கலிகா எப்படி முக்கியம்
வொக்கலிகா நினைத்தால் அங்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியும். ஆனால் இந்த முறை அவர்கள் எல்லோரும் ஒரே கட்சிக்கு வாக்களிக்காமல் மாறி மாறி வாக்களித்துள்ளனர்.மஜத கட்சி தன்னுடைய சரிவை சந்தித்த இடம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன முக்கியம்
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் மஜதவின் வலிமையான இடங்கள் என்று கருதப்படும் ஹுன்சூர், சிக்கபெல போர், கே ஆர் பேட் , ஹோசகோட்டே ஆகிய பகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதில் மிகவும் மோசமான சில இடங்களில் மஜத மூன்றாவது இடமும் பிடித்துள்ளது. இதன் மூலம் மஜத கட்சி மொத்தமாக வொக்கலிகா வாக்குகளை இழந்துள்ளது நிரூபணம் ஆகிறது.
நோட்டா எப்படி
மிக முக்கியமாக வொக்கலிகா அதிகம் இருக்கும் இடங்களான ராணிபென்னூர், எல்லாபூர், கே ஆர் புரம் ஆகிய தொகுதிகளில் மஜத நோட்டாவை விட குறைவாக வாக்குகளை பெற்றுள்ளது. இதே நிலை சென்றால் 2024ம் சட்டசபை தேர்தலில் மஜத கட்சி மிக மோசமான சரிவை சந்தித்து மொத்தமாக காணாமல் போகும். அந்த தேர்தலில் தேவ கவுடா போட்டியிடுவது சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்கள்.
குமாரசாமி எப்படி
அதேபோல் அப்பா தேவ கவுடாவிற்கு இருக்கும் ஆதரவு அவரின் மகன் குமாரசாமிக்கு இல்லை. குமாரசாமிக்கு அத்தனை மக்கள் ஆதரவோ வசிகரமோ இல்லை என்று கூறுகிறார்கள். முக்கியமாக் வொக்கலிகா சமூகத்தினர் குமாரசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.
குடும்பம் கட்சி
இன்னொரு பக்கம் மஜத முழுக்க முழுக்க ஒரு குடும்ப கட்சியாக தற்போது உருவெடுத்துள்ளது. அப்பா -மகனின் கட்சி என்று இதை மக்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். ஜேடிஎஸ் என்றால் தேவ கவுடா அண்ட் சான்ஸ் என்றும் ஆங்கிலத்தில் கிண்டல் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.அந்த கட்சியில் தற்போது தேவ கவுடா குடும்பத்தை சேர்ந்த குமாரசாமி , எச் . டி ரேவண்ணா, பவானி ரேவண்ணா, நிகில் குமாரசாமி, அனிதா குமாரசாமி, ப்ரஜ்வால் குமாரசாமி ஆகியோர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மிக மோசம்
இதனால் கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் பலர் கட்சிக்குள் ஓரம்கட்டப்பட்டுள்ளனர். முக்கியமாக கட்சியின் தொடக்க காலத்தில் உழைத்த பலர் கட்சிக்குள் மிக மோசமாக ஓரங்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் தேர்தல் நேரத்தில் பெரிதாக வேலை செய்யவில்லை. இதனால் லோக்சபா தேர்தலில் ப்ரஜ்வால் ரேவண்ணாவை தவிர மற்ற தேவ கவுடா குடும்பத்தினர், வேறு வேட்பாளர்கள் எல்லோரும் தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிக்குள் சிக்கல்
இந்த குடும்ப ஆதிக்கம் காரணமாக அந்த கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களான ஏ.எச் விஸ்வநாத் உள்ளிட்டவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் கட்சிக்குள் பணிகளை கவனிக்காமல் கலகம் செய்து வருகிறார்கள்.அதேபோல் கட்சிக்குள் ரேவண்ணா ஆதரவாளர்கள், குமாரசாமி ஆதாரவாளர்கள், தேவ கவுடா ஆதரவாளர்கள் என்று மூன்று குழுக்கள் உருவாகி உள்ளது.
என்ன நடக்குமோ
இதனால் இனி வரும் காலங்களில் மஜத கட்சி மொத்தமாக உடைய வாய்ப்புள்ளது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதை குமாரசாமியும் - தேவ கவுடாவை எப்படி சமாளிக்க போகிறார்கள், ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.