Exclusive: குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர்
பெங்களூர்: விஜி பன்னீர்தாஸ் மகன்களான, பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது பெங்களூர் அடுத்த, கஹ்கலிபுரா காவல் நிலையத்தில் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முன்னணி தொழில் குடும்பங்களில் ஒன்று, விஜிபி குடும்பம். விஜிபி சகோதரர்கள் சென்னையில் ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் சொத்துப் பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
விஜிபி சகோதரர்களில் செல்வராஜின் மகன் வினோத் ராஜ்க்கு சொந்தமான நிலத்தை விஜி பன்னீர்தாஸின் மகன்கள் பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
போலீசில் புகார்
இதுதொடர்பாக, வினோத் ராஜ் காவல்நிலையத்தில் கடந்த 11ம் தேதி, புகார் அளித்துள்ளார். போலீசார் இதுபற்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: பெங்களூர் தெற்கு தாலுகா, கெங்கேரி ஹோப்ளி பகுதியில், உள்ள பி.எம்.காவல் என்ற இடத்தில், 131/1 சர்வே எண்ணில், 54 ஏக்கர் நிலம் வினோத் ராஜின் மொத்த குடும்பத்திற்கும் சொந்தமானதாக உள்ளது. இதில் சர்வே எண் 131/5 மற்றும் 131/6 ல் 7 ஏக்கர் மற்றும் 10 குண்டே வினோத் ராஜுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினோத் ராஜ் பேட்டி
இதுதொடர்பாக, வினோத் ராஜ் 'ஒன்இந்தியா தமிழிடம்' கூறியதாவது: நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான். விஜி பன்னீர்தாஸின் 2வது சகோதரர் விஜி செல்வராஜின் மகன். இப்போது பன்னீர்தாசின் மகன்கள் பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீதுதான் நான் புகார் அளித்துள்ளேன். 1994ம் ஆண்டு செய்த, குடும்ப செட்டில்மென்ட் மூலமாக எங்கள் குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கும் தலா 7 ஏக்கர், 10 குண்டா வந்தது. 1996ல், இந்த நிலங்களை பராமரிக்க பாபுதாஸுக்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்தோம். அந்த பவரை பயன்படுத்தி, என்னுடைய பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை, எனக்கே தெரியாமல் விற்பனை செய்துவிட்டார்.
சொத்து பதிவு
இந்த வருஷம்தான் இதுபற்றி எனக்கு தெரியவந்தது. எனவே பிப்ரவரி மாதம், பவரை ரத்து செய்தேன். ஆனால் அதன்பிறகும், எஞ்சிய 6 ஏக்கர் 6 குண்டாஸ் நிலத்தை அவர் பெயரில் பதிவு செய்துள்ளார். இதையடுத்துதான், நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். இது தவிர, எங்கள் குடும்ப மொத்த சொத்துக்களையும் பிரித்துக்கொள்ள கோரி, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே இப்படி ஒரு பிரச்சினையும் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காவல்துறை
இதுகுறித்து கஹ்கலிபுரா காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த விஷயத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதை உறுதி செய்தனர். பாபுதாஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ரவிதாஸ், ராஜாதாஸ் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மும்பையை சேர்ந்த, ராவுத் அமோல் என்ற அமோல் 4வது குற்றவாளியாகவும், பெங்களூரை சேர்ந்த பாக்யம்மா என்ற பெண் 5வது குற்றவாளியாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடைசி இருவரும், வினோத்துக்கு சொந்தமான சொத்துக்களை வாங்கியவர்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீசில் பதிவாகியுள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.