இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவராகிறார் முஸ்லிம் இளைஞர்
பெங்களூரு: தாங்கள் இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய கர்நாடகாவின் லிங்காயத் மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க இருப்பது மதநல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக போற்றப்படுகிறது.
கர்நாடகாவில் லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைக்கக் கூடாது; வீரசைவர்கள் என்ற தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதனை கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் அரசும் அங்கீகரித்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.
கர்நாடகாவின் லிங்காயத்துகளைப் பின்பற்றி தமிழகத்திலும் ஐயா வைகுண்டரை பின்பற்றுவோரும் தங்களை தனி மதமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அண்மையில் கூட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் நாங்கள் இந்துக்கள் அல்லர்; சைவர்கள் என பிரகடனப்படுத்தும் மாநாட்டை நடத்துவோம் என கூறியிருந்தார்.
இதனிடையே வடகர்நாடகாவில் லிங்காயத்துகளுக்குரிய மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா என்ற 33 வயது முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க உள்ளார். லிங்காயத்து கோட்பாடுகளை உருவாக்கிய பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருவதால் முஸ்லிம் இளைஞராக இருந்த போது மடாதிபதியாக அவருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோரனேஷ்வர சாந்திதம மடத்தின் கீழ் வரும் அசுதி கிராமத்தின் முருகராஜேந்திர கோரனேஷ்வர மடத்துக்குத்தான் ஷரீஃப் மடாதிபதியாகிறார். ஷரீப்பின் தந்தை ரஹிமான்சாப் முல்லா இதே அசுதி மடத்துக்காக 2 ஏக்கர் நிலத்தை வழங்கியவர்.
மேலும் லிங்காயத் கோட்பாடுகளை மீறி திருமணமாகி குழந்தைகள் பெற்றவரான ஷரீப் மடாதிபதியாக்கப்படுகிறார் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.