ஊரை விட்டு ஓடி போய் காதல் திருமணம்.. சினிமா பாணியில் சமாதானம் பேச அழைத்து மாப்பிள்ளையை கொன்ற தந்தை
பெங்களூர்: கர்நாடகாவில் பெண்ணின் காதலனை திருமணம் விவகாரம் குறித்து பேசலாம் என வரவழைத்த அவரது தந்தை அந்த காதலனை ஜாதியை காரணம் காட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் இருவரும் காதலித்தும் வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர் தரப்புக்கு தெரியவந்தது.
இரு தரப்பிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே வந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மாப்பிள்ளை வீட்டாரின் மகாடி தாலுக்காவில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
ஆள் இல்லாத இடம்
இந்த நிலையில் அந்த வீட்டுக்கு சென்ற பெண்ணின் தந்தை, மாப்பிள்ளையையும் அவரது சகோதரரையும் நல்லவர் போல் நடித்துள்ளார். மேலும் தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கு ஊர் அறிய திருமணம் செய்து வைப்பது குறித்து பேச வேண்டும் என கூறி இருவரையும் தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில் இருவருக்கும் மது பரிமாறப்பட்டது.
கனவு
பின்னர் மாப்பிள்ளை என்றும் பாராமல் பெண்ணின் தந்தை, தனது பெண்ணை விட்டு விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு மாப்பிள்ளை மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் தந்தை , மாப்பிள்ளையின் ஜாதி குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் என் பெண்ணை திருமணம் செய்வது என கனவில் கூட நினைக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.
வாய்த் தகராறு
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு முற்றியது. பின்னர் தான் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டை எடுத்து மாப்பிள்ளையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார். இதற்கு அந்த பெண்ணின் சகோதரன் உள்பட 3 பேர் உடந்தையாக இருந்தனர்.
போலீஸார்
இந்த விவகாரம் குறித்து வெளியில் சொன்னால் உன்னை குடும்பத்துடன் கொன்றுவிடுவோம் என அந்த பெண்ணின் தந்தை, மாப்பிள்ளையின் சகோதரனை மிரட்டியுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் அந்த பெண்ணின் தந்தை, சகோதரனை கைது செய்து தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகிறார்கள். சினிமா பட பாணியில் பெண்ணின் தந்தை கொலையை நிகழ்த்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.