இந்தியாவுக்கு எதிராக பேசினாலே சுட்டுக் கொல்ல சட்டம் தேவை: கர்நாடகா அமைச்சர் பிசி பாட்டீல் பகீர்
பெங்களூரு: இந்தியாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை அதே இடத்தில் சுட்டுக் கொல்ல சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கர்நாடகா வேளாண் துறை அமைச்சர் பிசி பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
பெங்களூருவில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியது சர்ச்சையானது. இக்கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி எம்பி ஓவைசியும் பங்கேற்றார்.
ஆனால் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கத்தை எழுப்ப அவர் அனுமதிக்காமல் மைக்கை பறித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கம் எழுப்பிய அமுல்யா மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.
இந்நிலையில் சித்ரதுர்காவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா அமைச்சர் பிசி பாட்டீல், இந்தியாவின் காற்றை சுவாசிக்கிறார்கள்; இந்தியாவில் உணவு சாப்பிடுகின்றனர்; இந்தியாவின் குடிநீரை குடிக்கின்றனர். ஆனால் எதற்காக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை எழுப்புகிறார்கள்?
சீனாவில் தங்களது தேசத்துக்கு எதிராக பேசுவதற்கே ஒவ்வொருவரும் அச்சப்படுகின்றனர். இத்தகைய துரோகிகளை ஒடுக்க கடுமையான சட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவர வேண்டும். இத்தகைய துரோகிகளை, இந்தியாவுக்கு எதிராக பேசுகிறவர்களை, பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்புபவர்களை அதே இடத்தில் சுட்டுக் கொல்ல சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.