படித்தது 8- ம் வகுப்பு... இருப்பது ரூ.1,015 கோடி ...கர்நாடகா அமைச்சரின் மிரள வைக்கும் சொத்து கணக்கு
பெங்களூரு : கர்நாடகாவில் அமைச்சராக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.டி.பி. நாகராஜ் நாட்டிலேயே பணக்கார எம்.எல்.ஏ., என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நாகராஜின் சொத்தின் மதிப்பு 1,015 கோடி ரூபாய் ஆகும். ஓரிரு ஆண்டுகளுக்குள் சொத்துமதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் வசந்தகுமார் தான் மிகப் பெரிய கோடீஸ்வரராக பார்க்கப்பட்டார். தமக்கு ரூ.332.27 கோடி சொத்து இருப்பதாகவும் ரூ122.53 கோடிக்கு கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் வசந்தகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதவி
கர்நாடகவில் காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. சாதி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் சமநிலை ஏற்படாத நிலையில், அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் இரண்டு அமைச்சர்கள் நீக்கப்பட்டு காங்கிரசை சேர்ந்த 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
நாகராஜ் எம்.எல்.ஏ.
பெங்களூரு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒசக்கோட் தொகுதி எம்.எல்.ஏ.,வும் குருபா தலைவருமான நாகராஜ் (66) அமைச்சராகப் பதவியேற்றார். இவருக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சித்தராமையாவின் விஸ்வாசியான நாகராஜ், கடந்த ஆட்சியின் போது முக்கிய பங்காக இருந்தார். அதன் பின் ஏற்பட்ட சில மாற்றங்களால் நீர்வளத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளராக மாறியுள்ளார்.
ரூ.1,015 கோடி சொத்து
தேர்தலையொட்டி அவர் தாக்கல் செய்த தகவல் படி, சொத்து மதிப்பு ரூ. 1,015 கோடி என்றும் இதில், விவசாய மற்றும் வர்த்தக ரீதியிலான சொத்துக்கள், பிற தொழில்கள் உள்ளிட்டவை அடங்கும். 2016-17ம் ஆண்டுகளில் நாகராஜுவின் வருமானம் ரூ.104 கோடி ஆகும். வருடாந்திர வருமானம் 157 கோடி ரூபாயாக உள்ளது.
8-ம் வகுப்பு
நாகராஜுக்கு ரூ. 437 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.578 கோடிக்கு அசையா சொத்துக்களும் உள்ளன . 66 வயதான குருபா தலைவரான நாகராஜ் 8 -ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் நிதி முதுகெலும்பாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.