தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு டெல்டா இல்லை.. அப்போது ஓமிக்ரானா? அமைச்சர் அதிமுக்கிய தகவல்
பெங்களூரு: தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு டெல்டா வைரசை விட வித்தியாசமான பாதிப்பு இருப்பதாகக் கர்நாடக சுகாதார அமைச்சர் கே சுதாகர் தெரிவித்தார்.
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா - கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் இது தான் பேசுபொருள். தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
கடந்த காலங்களில் உருமாறிய வைரஸ் தான் அடுத்தடுத்த கொரோனா அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை உலக நாடுகள் எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன.
புதிய கட்டுப்பாடுகள்
ஓமிக்ரான் கொரோனா குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியதுமே உலகின் பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குத் தடை விதித்தது. குறிப்பாக இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் தடை விதிப்பதாக அறிவித்து விட்டன. இந்தியாவிலும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து வரும் பயணிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா வந்த இருவர்
பல்வேறு மாநிலங்களும் தென் ஆப்பிரிக்கா உட்பட ஆபத்தான நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இம்மாத தொடக்கத்தில் பெங்களூரு வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்களில் ஒருவருக்கு டெல்டா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வேறுவிதமான பாதிப்பு
அதேநேரம் மற்றொரு நபருக்கு டெல்டா உருமாறிய கொரோனா இல்லை என்றும் டெல்டாவை காட்டிலும் வேறு ஒரு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் கர்நாடக சுகாதார துறை அமைச்சர் கே சுதாகர் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறியத் தீவிர சோதனை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தினார்,
உறிதாயக சொல்ல முடியாது
அதன் பிறகு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்நாடக சுகாதார துறை அமைச்சர் கே சுதாகர், "தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய இருவரில் ஒருவருக்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா எனத் தகவல் பரவுகிறது ஆனால், இப்போதைக்கு அதைப் பற்றி என்னால் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்ல முடியாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஓமிக்ரான் குறித்த அனைத்து தகவல்களும் டிசம்பர் 1ஆம் தேதி கிடைக்கும் என நம்புகிறோம். மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு பின்னரே அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதன் பின்னரே தேவையான நடவடிக்கைகளைத் தொடங்குவோம்
தீவிர பாதிப்பு இல்லை
இது குறித்து தென் ஆப்பிரிக்காவில் உள்ள சில மருத்துவர்களிடம் நான் பேசினேன். இந்த ஓமிக்ரான் கொரோனா வேகமாகப் பரவலாம், ஆனால் இது டெல்டாவைப் போல ஆபத்தானது அல்ல. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்குக் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. சில சமயங்களில் நாடித் துடிப்பு அதிகரிக்கிறது, ஆனால் சுவை மற்றும் வாசனை இழப்பு ஏற்படுவதில்லை. தீவிர பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் மருத்துவமனையில் சிகிச்சையும் தேவைப்படுவதில்லை" என்றார். மேலும், தற்போதுள்ள சூழலில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Recommended Video
ஓமிக்ரான் கொரோனா
இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.