எங்கள் இடத்தில் அணை கட்டுகிறோம்.. தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம்- கர்நாடகம்
Recommended Video
பெங்களூர்: எங்கள் நிலத்தில் நாங்கள் அணை கட்டுகிறோம். மேகதாது திட்டத்தில் தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கர்நாடக மாநில அமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில் நேற்று பெங்களூரிலும் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
நேரம் ஒதுக்க வேண்டும்
அதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் டி.கே. சிவகுமார், மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார். அதற்கு தமிழக முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிநீர் மற்றும் மின்சாரம்
இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில் மேகதாதுவுக்கு நேரில் சென்று அணை கட்ட உள்ள இடத்தை பார்வையிட உள்ளேன். என்னுடன் பத்திரிகையாளர்களையும் அழைத்து செல்கிறேன். நீர்ப்பாசனத்திற்காக நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை. குடிநீர் பயன்பாடு மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் இதன் நோக்கம். மேகதாது பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் இல்லை.
சுயநலம்
எங்களின் சட்ட நிபுணர் குழுவினர், தமிழகத்தை தொடர்பு கொண்டு பேசுவார்கள். இந்த திட்டம் தமிழகத்திற்கு உதவும். எங்களுக்கு இதில் இருந்து மின்சாரம் கிடைக்கும். அந்த நீரை நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். இது எங்கள் மாநிலத்தின் உரிமை. இந்த திட்டத்தை எங்களின் சுயநலத்திற்காக மட்டும் செயல்படுத்தவில்லை.
கோபம் வேண்டாம்
கர்நாடக எல்லைக்குள் எங்கள் நிலத்தில் தான் அணை கட்டுகிறோம். நிலம், இதற்கு செலவிடப்படும் நிதி அனைத்தும் கர்நாடகத்திற்கு சொந்தமானது. வேறு எந்த மாநிலம் மீதும் கர்நாடகத்திற்கு விரோதம் இல்லை. அதனால் தமிழகம் கோபப்பட வேண்டியது இல்லை.
காவிரி இங்கிருந்துதான் செல்ல வேண்டும்
இந்த விஷயத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தமிழகம் தயாராக இல்லை என்று தமிழக மாநில அமைச்சர் சண்முகம் கூறி இருக்கிறார். எங்களுடன் பேச முடியாது என்று சொன்னால் எப்படி?. நாங்கள் தமிழகத்துடன் தகராறு செய்ய மாட்டோம். இரு மாநிலத்தினரும் சகோதரர்கள். காவிரி நீர் கர்நாடகத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.