ராஜினாமா செய்ய வேண்டாம்.. பேசலாம் வாங்க.! கர்நாடகாவில் காங்., எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு
பெங்களூரு: கர்நாடகத்தில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 13 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாகவே கூட்டணி ஆட்சிக்குள் கடும் குழப்பங்கள் நிலவி வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கு முன்பாக எடியூரப்பா தலைமையிலான பாஜக, மூன்று முறை ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்த முனைந்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே கிட்டியது. தற்போது மக்களவை தேர்தல் முடிந்து அசூர பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல் போய்விடுமோ என்றெண்ணி, பாஜக தலைமை தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இப்போதைய சூழலில் கர்நாடகத்தில் தேர்தல் வருவதை எந்த கட்சிகளுமே விரும்பவில்லை. எனவே பாஜக பொறுமை காத்து வருகிறது.
13 ஜேடிஎஸ் - காங். எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா?.. கவிழ்கிறது குமாரசாமி ஆட்சி!
இந்நிலையில் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக, பாஜக சொல்லி வருவது போல தானாகவே கர்நாடக அரசு கவிழும் சூழலில் உள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமி அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், கூட்டணி ஆட்சியை சேர்ந்த சுமார் 13 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாள உறுப்பினர்கள் என இரு கட்சியினரும் அடக்கம். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 எம்எல்ஏ-க்கள் கடந்த வாரம் ராஜினமா செய்த நிலையில், தற்போது 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் இதே முடிவை எடுத்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்கள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக-வுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது 13 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா முடிவு எடுத்துள்ளதால் குமாரசாமி அரசுக்கு ஆபத்து உருவாகியுள்ளது
இந்நிலையில் தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்த அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் பரமேஸ்வரா, அமைச்சர் சிவகுமார் ஆகியோர் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவகுமார், ராஜினாமா செய்ய போவதாக கூறியுள்ள உறுப்பினர்களிடம் பேச்சு நடத்த உள்ளோம்.
யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள், கூட்டணி ஆட்சிக்கு ஏதும் ஆபத்து ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்தார்.