கர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்
பெங்களூர்: பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டசபையில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை குமாரசாமி அரசு கொண்டு வந்தது.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு கொறடாவுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் சட்டசபை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என்று இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நீதிமன்றமே விளக்கம் அளிக்க வேண்டும். அது வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து மாநில ஆளுநரிடம் பாஜக முறையிட்டது. அப்போது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் இரு நாட்களாகியும் நடத்தப்படவில்லை. இதையடுத்து சட்டசபை திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கர்நாடக பேரவையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.