கர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்!
பெங்களூரு: ஜேடிஎஸ்-காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் கர்நாடகா சபாநாயகரே முடிவெடுக்கலாம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பங்கேற்க சபாநாயகர் வலியுறுத்தக் கூடாது என பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்.
கர்நாடகாவில் ஜூலை 6-ந் தேதியன்று 16 எம்.எல்.ஏக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்தது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
ஜூலை 6-ந் தேதி முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு:
ஜூலை 6: ஆளும் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கட்சியின் 16 எம்.எல்.ஏக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்தனர். பதவியை ராஜினாமா செய்த கையோடு மும்பைக்கு சென்றனர்.
ஜூலை 7: எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு பாஜகதான் காரணம் என ஜேடிஎஸ்- காங்கிரஸ் குற்றச்சாட்டு. ஆனால் இந்த சர்ச்சையில் இருந்து விலகி இருப்போம் என்றது பாஜக.
சபாநாயகர் அதிகார வரம்பில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அமைச்சர்களும் ராஜினமா
ஜூலை 8: குமாரசாமி அரசுக்கான ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாபஸ் பெற்றனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக கர்நாடகா அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
பாதுகாப்பு கேட்ட எம்.எல்.ஏக்கள்
ஜூலை 9: எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் முறையாக இல்லை என கூறி சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்தார். மும்பையில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களோ போலீஸ் பாதுகாப்பு கோரினர்.
சிவகுமார் தடுத்து நிறுத்தம்
ஜூலை 10: கர்நாடகா அமைச்சர் சிவகுமார் மும்பையில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றார். ஆனால் எம்.எல்.ஏக்களை சந்திக்கவிடாமல் போலீசாரால் அவர் தடுக்கப்பட்டு பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் 10 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு
ஜூலை 11: ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகரை நேரில் சந்திக்க உத்தரவிட்டது. ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏக்களில் 11 பேர் சபாநாயகரை சந்தித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்
ஜூலை 12: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக முதல்வர் குமாரசாமி அறிவித்தார். எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்றைக்கு (ஜூலை 16) ஒத்திவைத்தது.
ராஜினாமா வாபஸ்
ஜூலை 13: புதிய திருப்பமாக ராஜினாமா செய்ததாக அறிவித்த எம்.எல்.ஏ. நாகராஜ், பதவி விலகலை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
நாகராஜ் நிலையில் குழப்பம்
ஜூலை 14 : ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்த எம்.எல்.ஏ. நாகராஜ் திடீரென மும்பைக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்தார். இதனால் அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதில் குழப்பம் உருவானது.
கர்நாடகா சட்டசபை
ஜூலை 15: கர்நாடகா சட்டசபை கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு 18-ந் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தாரர்
உச்சநீதிமன்றம் விசாரணை
ஜூலை 16: உச்சநீதிமன்றத்தில் நேற்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்க கோரும் வழக்கின் விசாரணை நடைபெற்றது. எம்.எல்.ஏக்கள் தரப்பு, சபாநாயகர் மற்றும் முதல்வர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என கூறியிருந்தார்.
சபாநாயகருக்கே அதிகாரம்
ஜூலை 17: அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகரே முடிவு எடுக்கலாம்; ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.