கர்நாடகாவில் 1 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெடியாகிறோம்.. துணை முதல்வர் பகீர் தகவல்
பெங்களூர்: ஒரு லட்சம் கோவிட் -19 நோயாளிகளை கையாள்வதற்கு கர்நாடகா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்ற பகீர் தகவலை துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய் தாக்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளது. பெங்களூரை சேர்ந்த பெண் மற்றும் கல்புர்கியை சேர்ந்த ஆண் என, 2 பேர் இந்த நோயால் கொல்லப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரண்டாவது மரணத்துடன்.
இந்த நிலையில், சட்ட மேலவையில், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அவர் கூறுகையில்,
"COVID-19 க்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதைக் கையாள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 1,000 வென்டிலேட்டர்களுக்கு நாங்கள் ஏற்கனவே, கொள்முதல் செய்ய, உத்தரவு பிறப்பித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
"இதுவரை வென்டிலேட்டர் தேவைப்படும் எந்த நோயாளியும் இல்லை. வழக்கமான சிகிச்சையால் நோயாளிகள் நலமடைந்து வருகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.
நாராயணா ஹெல்த் மருத்துவமனை குழுமத்தின், நிறுவனர் டாக்டர் தேவி ஷெட்டி, அளித்த டிவி பேட்டி ஒன்றின்போது, கர்நாடகாவில் மட்டும் குறைந்தபட்சம் 80,000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருந்த நிலையில், துணை முதல்வரின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
தனிமைப்படுத்தப்படும் வசதிக்காக (quarantine) 20,000 ஹோட்டல் அறைகளை புக் செய்து வைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் துணை முதல்வர் கூறினார். இது தவிர, 15 லட்சம் மாஸ்குகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு, இதுபறர்றி கூறுகையில், "தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 700 வென்டிலேட்டர்கள் உள்ளன. இது தவிர, நாங்கள் 1,000 வென்டிலேட்டர்களை வாங்குக உள்ளோம். தனியார் மருத்துவமனைகள் 30% வென்டிலேட்டர்களை இலவசமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கையாள ரூ .200 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது" என்று அவர் கூறினார்.
மெக்காவிலிருந்து திரும்பிய, சிக்கபல்லாபூர் மாவட்டம் கவுரிபிதனூர் நகரத்தைச் சேர்ந்த ஒரு 75 வயது பெங்களூரில் உள்ள பவுரிங் மற்றும் லேடி ஹர்சன் அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நோயாளிக்கு நீரிழிவு மற்றும் இருதய பிரச்சினைகள் உட்பட பல நோய்கள் இருந்தன என்று ஸ்ரீராமுலு தெரிவித்திருந்தார். இந்த மூதாட்டியின், மரணத்திற்கான காரணம் பிறகுதான் தெரியவரும் என்று ஸ்ரீராமுலு தெரிவித்தார். கர்நாடகாவில் கொரோனா நோய் தாக்கம் அதிகரிப்பதாக துணை முதல்வர் கூறிய கருத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.