டீசல் திருடுவதற்காக.. அரசு பேருந்தை கடத்திய மர்மநபர்கள்.. கர்நாடகாவில் விநோத சம்பவம்!
பெங்களூரு: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்து விட்டது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.01 ஆகவும் டீசல் ரூ. 98.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை றெக்கை கட்டி பறந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வாகனங்களில் இருந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் டீசல் திருடுவதற்காக அரசு பேருந்தையே மர்ம கும்பல் கடத்திய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அந்த மாநிலம் துமகுரு மாவட்டம் குப்பி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை (வண்டி எண் KA-06 F-0858) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் டிரைவர் ஹனுமந்தராயா நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
பேருந்தை கடத்திய நபர்ககள்
திங்கள்கிழமை காலை 6 மணியளவில் அவர் வழக்கம்போல் பேருந்தை இயக்க வந்தபோது பேருந்து மாயமானது கண்டு திடுக்கிட்டார். அந்த பேருந்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது பற்றி டிரைவர் ஹனுமந்தராயா உடனடியாக போலீசில் புகார் செய்தார். பேருந்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் பேருந்து எங்கே இருக்கிறது? என்று போலீசார் பார்த்தனர்.
டீசல் மட்டும் திருட்டு
அப்போது குப்பி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் ஜன்னேனஹள்ளி என்ற இடம் அருகே பேருந்து நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனியாக அங்கு சென்ற போலீசார் பேருந்தை மீட்டனர். அந்த பேருந்தில் டேங்கில் இருந்த டீசல் மட்டும் திருடப்பட்டு இருந்தது. ஆகவே மர்ம நபர்கள் டீசலை திருடுவதற்காக பேருந்தை கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார் எச்சரிக்கை
''முன்னதாக பெங்களூரு மற்றும் மைசூர் மற்றும் ஹூப்பள்ளி போன்ற நகரங்களில் எரிபொருள் திருட்டு வழக்குகள் பெரும்பாலும் பதிவாகியிருந்தது, ஆனால் சிறிய நகரங்களிலிருந்தும் இதுபோன்ற வழக்குகள் பதிவாகின்றன. எனவே குடியிருப்பு வளாகங்களில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் தங்கள் வாகனத்தை கண்காணிக்க வேண்டும்'' என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.