கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து.. மாஸ்க் போடுங்க போதும்.. மொத்தமாக பல்டியடித்த அரசு!
பெங்களூர்: இரவு நேர ஊரடங்கு உத்தரவு என்ற ஒன்றை அமல்படுத்திவிட்டு, அதில் ஆயிரம் மாற்றங்களையும் செய்து, இதுவெல்லாம் ஒரு ஊரடங்கா என்று எல்லோரும் கேட்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்ட கர்நாடக அரசு, இப்போது மொத்தமாக அந்த உத்தரவையும் ரத்து செய்துவிட்டது. ஆம், இன்று முதல் அமலுக்கு வரவிருந்த இரவு நேர ஊரடங்கை ரத்து செய்வதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உருமாற்றம் செய்த கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்கள் மூலமாக அந்த கொரோனா பரவிவிடுமோ என்ற முன்னெச்சரிக்கையை அனைத்து மாநில அரசுகளும் எடுத்துள்ளன.
கர்நாடக அரசும் இப்படித்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
கர்நாடக அரசியலில் திடுக் திருப்பங்கள்.. குமாரசாமி கட்சியே காணாமல் போக வாய்ப்பு.. ஒரே நாளில் 2 பல்டி
எடியூரப்பா பேட்டி
நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் எடியூரப்பா. அப்போது, அவர் அளித்த பேட்டியில், 23ம் தேதியான நேற்று இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வரும் ஜனவரி 2ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு இருக்கும். இரவு நேரத்தில் வெளியே யாரும் வராமல் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். முதல்வர் அறிவிப்புக்கு தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு குரல்களை எழுப்பினர்.
இரவு நேர ஊரடங்கு
இந்த நிலையில், நேற்று மாலை அரசு வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதிவரை மட்டுமே இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டது. காலநேரமும் குறைக்கப்பட்டது. ஆம்.. இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை மட்டும் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. எனவே பிற மாநில வாகனங்கள் அந்த நேரத்தில் கர்நாடகாவிற்குள் வர முடியாது என்பதோடு உள்ளூர்களிலும் வாகன இயக்கம் இருக்காது என கூறப்பட்டது.
ஆட்டோ, டாக்சி இயங்கலாம்
இப்படி ஒரே நாளில் இருமுறை முடிவை மாற்றிய நிலையில், இன்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், இரவு நேர ஊரடங்கு காலகட்டத்திலும், பெங்களூர் நகர பஸ்கள், கர்நாடக அரசு பஸ்கள் இயங்கலாம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்ல, டாக்சி மற்றும் ஆட்டோக்களும் இயங்கலாம் என அறிவித்தார்.
இதுக்கு பேரு ஊரடங்கா
இத்தனையும் ஊரடங்கு நேரத்தில் இயங்கினால் அதன் பெயர் ஊரடங்கா என மக்கள் கேட்கத் தொடங்கினர். மக்கள் பயணிக்கத்தான் இந்த வாகனங்கள்.. ஒரு பக்கம் மக்கள் ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் உள்துறை அமைச்சர். மறுபக்கம் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார் என்றால் இதற்கு என்ன அர்த்தம் என மக்கள் கேள்வி எழுப்பினர்.
விதிமுறைகளை மாற்றும் கர்நாடக அரசு
நேரத்தை மாற்றி, நாட்களை மாற்றி, ரூல்சையும் மாற்றி ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டபடி இருக்கிறது எடியூரப்பா அரசு. தொழிலதிபர்களின் அழுத்தத்தால் இப்படி மாறி மாறி அறிவிப்பு வருவதாக கூறப்பட்டது. ஆனால், இன்று மாலை எடியூரப்பா அலுவலகம் மற்றொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இன்று முதல் அமலுக்கு வரவிருந்த ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டது. கர்நாடக அரசின் இந்த பல்டிகள் மக்களிடையே நகைப்புக்குரியதாக மாறியுள்ளன.