அசாமை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு? பெங்களூரு அருகே வெளிநாட்டினர் தடுப்பு மையம்
பெங்களூரு: அசாம் மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவும், அங்கு வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காண தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) பட்டியலைத் தயாரிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெருமளவில் வங்கதேசம் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சட்டவிரோதமாக குடியிருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக பெங்களூருவில் அதிக அளவில் வெளிநாட்டவர் சட்டவிரோதமாக வசிப்பதாகவும் இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் பெரும் தொல்லையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்தே கர்நாடகாவும், அங்கு வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) பட்டியலைத் தயாரிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
நிறைய சிக்கலை சந்திக்கிறோம்
இது தொடர்பாக கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எல்லையைத் தாண்டி மக்கள் வந்து குடியேறும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். இவர்களால் நிறைய சிக்கல்கள் இருப்பதால், இவர்களை பற்றிய சாத்தியமான அனைத்து தகவல்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். இந்த விஷயத்தை மத்திய உள்துறை அமைச்சரிடம் நாங்கள் எடுத்து சென்றுள்ளோம்" என்று கூறினார்.
முள்வேலியுடன் தயாராகுது
இதனிடையே சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுப்பது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. எனினும் பெங்களூரிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள நெல்மங்கள தாலுகாவில் ஏற்கனவே ஒரு வெளிநாட்டினர் தடுப்பு மையம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பழைய அரசாங்க வளாக கட்டிடம் மாற்றப்பட்டுள்ளது. அதில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோத குடியேறிகள் தப்பிப்பதைத் தடுக்க முள்வேலி போட்டு பாதுகாப்பு ரீதியாக பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்கு தங்கவைக்கப்படுவர்
இந்த மையத்தினை மத்திய அரசின் உத்தரவுப்படி கர்நாடகா மாநில அரசு கடந்த ஜூலை மாதம் அமைக்க வலியுறுத்தியிருந்தது.இந்த இடத்தில் தான் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் வரை தாங்குவதற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக கர்நாடகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா எம்பி கோரிக்கை
சட்டவிரோதமாக வசித்து வரும் ஆப்பிரிக்கர்கள் மற்றும் வங்கதேசத்தவரை கண்டறிந்து அவர்களுக்காக பெங்களூரு அருகே ஓரிரு கூடுதல் தடுப்பு மையங்கள் கட்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பெங்களூரு மத்திய தொகுதி எம்பி பி.சி. மோகன் மற்றும் மகாதேவபுரா எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியர்களுக்கு சிரமம் கூடாது
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது, "மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும், ஆனால் இந்திய குடிமக்கள் என்.ஆர்.சி யால் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்" என்று கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே கூறியுள்ளார்.